ப.சிதம்பரம் வீட்டில் அதிரடி சோதனைக்கு காரணம் என்ன? - வீடியோ
சென்னையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நுங்கம்பாக்கம் வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இது வருமான வரித்துறையினரின் ரெய்டு சீசன் என்று வர்ணிக்குமளவுக்கு கடந்த மாதம் முதல் வருமான வரித்துறையினர் தமிழ்நாட்டை ரவுண்டு கட்டி வருகின்றனர். கடந்த மாதம் மாநில அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீட்டில் அதிரடி சோதனை அதையொட்டிய விசாரணை என தமிழ்நாடே அதிர்ந்து போனது.

இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் குடியிருக்கும் நுங்கம்பாக்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 5 மணி நேரம் நீடித்தது.
தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதில் கார்த்தி சிதம்பரத்துக்கு மறைமுகமாக வருமானம் கிடைத்தது, அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.மேலும் கார்த்தி சிதம்பரத்தின் மீது டெல்லி போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
ப.சிதம்பரம் பணமதிப்பிழப்பு அறிவிப்பு விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வந்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு சிறப்புப் பேட்டி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் வீட்டில் சோதனை நடக்கும்போது பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பாஜக அரசு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரி சோதனைகளை மேற்கொள்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த குறி யார் மீதோ?












Click it and Unblock the Notifications