சசிகலா உறவினர் வீடுகளில் 2-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு- ரொக்க பணம், நகைகள் சிக்கின!
சசிகலா உறவினர் வீடுகளில் 2-வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் 2-வது நாளாக நடைபெற்றது. முதல் நாள் சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றத்துக்காக நடத்தி வந்த 60 போலி நிறுவனங்கள், அவற்றின் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு அறிவிப்பைத் தொடர்ந்து ஆபரேஷன் கிளீன் பிளாக் மணி எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சசிகலா, தினகரனின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள் என நாடு முழுவதும் மொத்தம் 190 இடங்கள் குறி வைக்கப்பட்டன.
இந்த 190 இடங்களிலும் நேற்று ஒரே நேரத்தில் 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்காக திருமண கோஷ்டியினர் போன்று வாடகை கார்களில் சென்று இந்த ஆபரேஷனை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
190 இடங்களில் ரெய்டு
சென்னையில் ஜெயா டிவி, அதை நடத்தி வரும் இளவரசி மகன் விவேக்கின் வீடு, அவரது ஜாஸ் சினிமாஸ் முக்கிய இலக்காக இருந்தது. மேலும் இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீடு, சென்னை போயஸ் கார்டனில் பழைய ஜெயா டிவி அலுவலகம், மன்னார்குடியில் திவாகரன் வீடுகள், கல்லூரி, திருச்சியில் கலியபெருமாள், டாக்டர் சிவகுமார் வீடுகள், கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி வீடு, நிறுவனங்கள், கொடநாடு எஸ்டேட், என 190 இடங்களில் இச்சோதனை நேற்று அதிகாலை தொடங்கி நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றது.
ஆவணங்கள் சிக்கின
விவேக் வீடு, சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, ஜெயலலிதா மரண சர்ச்சையில் சிக்கிய திருச்சி டாக்டர் சிவகுமார், திவாகரன் கல்லூரி ஆகிய இடங்களில் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் ஏராளமான முக்கியமான ஆவணங்கள் வசமாக சிக்கியுள்ளன.
கருப்பு பணம் பரிமாற்றம்
அத்துடன் சசிகலா குடும்பத்தினர் நடத்தி வந்த 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் மூலமாகவே பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணத்தை பரிமாறியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
அறை சீல் வைப்பு
புதுவையில் தினகரனின் ரகசிய பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அங்கு ஒரு அறையை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். புதுவை நகைக் கடை ஒன்றிலும் விடிய விடிய சோதனை நடைபெற்றது.
இரவு 10 மணி வரை சோதனை
தினகரனின் தீவிர ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி வீடும் சோதனயில் சிக்கியது. அவரது வீட்டில் இரவு 10 மணி வரை சோதனை நடைபெற்றது.
2-வது நாளாக சோதனை
இந்த சோதனை இன்றும் 2-வது நாளாக நீடித்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு விசாரணையும் நடைபெற்றது. இன்றைய சோதனையில் ரொக்க பணம், நகைகள், மிக முக்கிய ஆவணங்கள் சிக்கின.