சென்னையில் அடுத்தடுத்து தாக்கப்படும் ஆசிரியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு மதுரவாயலில் ஆசிரியை ஒருவரை மாணவர் அறைந்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பாஸ்கரன். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடம் எடுக்கையில் வகுப்பறையில் சேட்டை செய்த மாணவன் அர்னால்டை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் பாதியிலேயே பள்ளியில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். சிறிது நேரத்தில் ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து பாஸ்கரனை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் மாணவனின் தந்தையான தொழில் அதிபர் அருளானந்தம் உள்பட 36க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்கும் முன்பு மதுரவாயலில் கம்ப்யூட்டரை முறையாக ஆஃப் செய்யாத பிளஸ் 2 மாணவரை ஆசிரியை லட்சுமி கண்டித்ததுடன் அடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர் லட்சுமியை கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவரது காது சவ்வு கிழிந்துவிட்டது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இப்படி தெய்வத்திற்கு முன்பு வரும் ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் மரியாதை குறைந்து வருவதையே இந்த தாக்குதல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
ஆசிரியர்களை கண்டால் கையெடுத்து கும்பிட்ட காலம் போய் தற்போது ஆசிரியர்களை ஆள் வைத்து அடிப்பது, மாணவர்களே அடிப்பது, கத்தியால் குத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது கல்வியை கற்றுத் தருவோரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications