சிங்கப்பூரின் முக்கிய கூட்டாளி இந்தியா! - சிங்கப்பூர் பிரதமர்
சென்னை: சிங்கப்பூரின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க் கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
மேலும், இச்சந்திப்பின்போது இரு தரப்புக்கும் இடையே அறிவுசார் சொத்துரிமை உள்பட 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மோடி கூறுகையில், "இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புதான் முக்கியத் தூணாக விளங்குகிறது.
வளர்ந்து வரும் பயங்கரவாதம், குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதம், அடிப்படைவாதச் சிந்தனை வளர்வது ஆகியவை நமது பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நமது சமூகக் கட்டமைப்பையே அவை அச்சுறுத்துகின்றன.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட வேண்டும். இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுப்பதில் ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இருதரப்பு உறவுகளின் அடிப்படையாக வர்த்தகமும் முதலீடுகளும் அமைந்துள்ளன.
வலிமையான பொருளாதார வளர்ச்சி, மாற்றம் என்ற பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. இந்தப் பயணத்தில் சிங்கப்பூரை மிக முக்கியத் தோழனாக இந்தியா கருதுகிறது.
என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் தீவிரமான நல விரும்பிகளில் ஒருவரான சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், இருதரப்பு நல்லுறவுக்கும் சாரதியாக விளங்குகிறார்," என்றார் மோடி.
யூரி தாக்குதலுக்கு கண்டனம்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் கூறியதாவது:
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரின் உரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். சிங்கப்பூரின் முக்கியமான கூட்டாளியாகத் திகழ்கிறது இந்தியா.
விரைவில் இரு நாடுகளின் நிதியமைச்சர்களுக்கு இடையே நிதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வைப்பது குறித்து ஆராய்ந்தோம். இதற்காக சிங்கப்பூர் தரப்பில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னமும், இந்தியத் தரப்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் நியமிக்கப்படுவார்கள்," என்றார் அவர்.