இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியாவின் ராஜதந்திரம்: ஞானதேசிகன்
வேலூர்: ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது ராஜதந்திரமுறை என விளக்கமளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்.
வேலூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சியின் வேட்பாளர் விஜய் இளஞ்செழியன் அறிமுக கூட்டம் ஆம்பூர் பிரியா மஹாலில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு ஆம்பூர் நகர தலைவர் எஸ்.மாணிக்கம் தலைமை தாங்க, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், பாலூர் ஈ.சம்பத், மாவட்ட துணை தலைவர் கே.குப்புசாமி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.பழனி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் ராம்கோபால் வரவேற்று பேசினார்.
வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை அறிமுகப்படுத்தினார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
சட்டசபைத் தேர்தலிலும் தனித்துப் போட்டி...
காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் தனித்து களம் காண வேண்டும் என்பதே அனைத்து தொண்டர்களின் விருப்பம் ஆகும். அதைவிட அதிகமான விருப்பம் எனக்கு இருக்கிறது.
உற்சாகமான தேர்தல் பிரச்சாரம்...
தமிழ்நாட்டில் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தனியாக இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் திடமான நம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கருணாநிதியின் கடுமையான வார்த்தைகள்...
காங்கிரஸ் மன்னிப்பு கேட்டால் ஆதரவளிக்க தயார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பது, கடுமையான வார்த்தைகளை அவர் உபயோகித்து இருப்பது வருத்தமளிக்கிறது. கடந்த 10 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் இருந்தனர். 7 அமைச்சர்களை கேட்டு பெற்றனர். ஆனால் தற்போது அத்தகையை வார்த்தைகளை பிரயோகித்திருப்பது வருத்தமளிக்கிறது. மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நிலைப்பாடே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படாது. காங்கிரஸ் கட்சியும் மன்னிப்பு கேட்கும் நிலையில் இல்லை.
மேலிடம் முடிவு செய்யும்...
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டால் தி.மு.க.வை கூட்டணியில் சேர்ப்பது குறித்து அன்றைக்கு இருக்கும் சூழ்நிலையை பொறுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.
இதற்கு முந்தைய தீர்மானங்கள்...
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது குறித்து மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இதற்கு முன்பு 2 முறை இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
ராஜதந்திரம்....
இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து ஆதரவளிக்க கோரினோம். ஆனால் தற்போது தீர்மானத்தை புறக்கணித்துள்ளது இந்தியாவின் ராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது. ஏன் ஆதரவாக வாக்களிக்கவில்லையென வெளிவிவகாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
நன்றிக்கடனாக மீனவர்கள் விடுதலை...
இலங்கை தமிழர்களின் 13-வது அரசியல் அமைப்பு சட்டத்தை அமல்படுத்தவேண்டும். அங்கு நடக்கும் உதவிகள் தொடர்ந்து அவர்களுக்கு கிடைக்க உறுதிசெய்ய வேண்டுமென வெளிவிவகாரத்துறை செயலர் கூறியிருக்கிறார். இதுதான் இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காததால், உடனேயே இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் பொருட்டல்ல...
கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருப்பதாக கூறுவது ஏற்ககூடியதல்ல. பஞ்சாபில் காங்கிரஸ் வரும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அகாலிதளம் ஆட்சியை பிடித்தது. உத்தரபிரதேசத்தில் மாயாவதி வருவார் என கூறப்பட்டது. ஆனால் அகிலேஷ் ஆட்சியை பிடித்தார். தமிழகத்தில் இதற்கு முந்தைய சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என கூறினர். ஆனால் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அதனால் கருத்து கணிப்புகளை பெரிதாக எடுத்துகொள்ள வேண்டியது இல்லை''என இவ்வாறு அவர் தெரிவித்தார்.