வரலாற்று சிறப்புமிக்க சபஹர் உள்பட இந்தியா-ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தெஹ்ரான்: வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தம் உள்பட 12 ஒப்பந்தங்கள் இந்தியா, ஈரான் இடையே இன்று கையெழுத்தாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஈரான் சென்றார். தெஹ்ரானில் அவர் ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் வரலாற்று சிறப்புமிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தமும் ஒன்று. சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ரூ.1, 360 கோடி முதலீடு செய்கிறது. ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது மூலம் இருநாட்டு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும்.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சபஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ரூ.1,360 கோடி அளிக்கிறது. பிராந்திய நிலைமைகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இந்தியா, ஈரான் இடையேயான நட்பு பழமை வாய்ந்தது. பல நூற்றாண்டுகளாக கலை, வர்த்தகம், கட்டமைப்பு, கலாச்சாரம் என பல விஷயங்களில் நம் சமூகம் இணைந்து செயலாற்றுகிறது. குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஈரான் செய்த உதவிகளை மறந்துவிட முடியாது என்றார்.
பாகிஸ்தானின் குவாதர் நகரில் சீனா மிகப்பெரிய துறைமுகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குவாதர் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.