தமிழக மீனவர்கள் 12 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
நெடுந்தீவு அருகே, மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை நேற்று இரவு இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
Recommended Video
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை நேற்று இரவு இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களின் இரண்டு படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் சிலர் தங்களது படகுகளில் நேற்று மாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களையும், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். இதனையடுத்து, தமிழக மீனவர்கள் அனைவரையும் இலங்கையிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
ஏற்கெனவே கடந்த 31ஆம் தேதி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றிருந்தபோது, 8 தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.