தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லையாம்.. விளக்கத்தை பாருங்க
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இந்திய பாதுகாப்பு படை பிரிவு சார்பில் விளக்கம் அளித்து இருக்கிறது.
சென்னை: தமிழக மீனவர்கள் மீது கடலோர காவல் படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இந்திய பாதுகாப்பு படை பிரிவு விளக்கம் அளித்து இருக்கிறது. மேலும் மீனவர்கள் தவறான தகவலையளித்து மக்களை திசை திருப்புகிறார்கள் எனவும் அறிக்கையொன்றில் குற்றம்சாட்டி இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டின் போது மீனவர்களை ஹிந்தியில் பேசும் படி அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த சூட்டில் ராமேஸ்வரத்தை சேர்ந்த பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் என்ற மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். மீனவர்களை கடலோர காவல் படையினர் மிகவும் துன்புறுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த புகாருக்கு இந்திய பாதுகாப்பு படை பிரிவு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. அதில் ''நாங்கள் கடலில் சோதனை செய்த போது தமிழ்நாட்டிற்கு சொந்தம் இல்லாத போட் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த போட்டில் இருந்தவர்கள் நாங்கள் நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றனர். 50 நிமிடம் துரத்திதான் அவர்களை பிடித்தோம். துப்பாக்கி சூடு நடத்தவில்லை. கடலோர காவல்படை ரப்பர் குண்டுகளை பயன்படுத்துவதேயில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ''இந்த சம்பவத்தில் மீனவர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை. நாங்கள் சாதாரணமாக சோதனை செய்ததை தவறாக வெளியே பரப்ப முயற்சிக்கிறார்கள். மீனவர்கள் மக்களை திசை திருப்புகிறார்கள்'' என்று அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.