கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை- ஹைகோர்ட்டில் மத்திய அரசு
சென்னை: கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அம்மனுவில். சர்வதேச கடல் எல்லையை தாண்டி இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை கச்சத்தீவு தொடர்பான இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே அமைச்சரின் அறிக்கை குறித்து விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இம்மனுவுக்கு வெளியுறவுத் துறையின் துணைச் செயலர் மாயங் ஜோஷி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமைக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்பது மனுதாரர் தரப்பு வாதம்.
ஆனால் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. கச்சத்தீவின் மீதான இலங்கை அரசுக்கு உள்ள இறையாண்மை முடிந்து போன விஷயம். கடந்த, 1974, 1976 ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவில் வலையை உலர்த்தவும் ஆண்டு தோறும் நடக்கும் அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்ளவும் இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய உரிமை உள்ளது. கச்சத்தீவுக்கு செல்லலாம் என்ற உரிமையை அந்த பகுதியைச் சுற்றி இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை உள்ளது என புரிந்து கொள்ளக் கூடாது.
இதனால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு முரணாக வெளியுறவு துணை இணை அமைச்சரின் பேச்சு உள்ளது என்பது ஏற்புடையது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை 27ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.