சசிகலாவுக்கு செக் வைத்த ஓ.பி.எஸ்.. ஜெ. மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன்
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஒரு புரளியை சொல்லி வருகிறார்கள். காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். ராஜினாமாவை திரும்ப பெற கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன்.
எம்ஜிஆர் எதற்காக அதிமுகவை நிறுவினாரோ, ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து சிறப்பான ஆட்சியை, ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை கொண்டு போய் சேர்த்தார். அந்த வழியில்தான் நானும் ஆட்சி நடத்தினேன். இருமுறை சோதனை ஏற்பட்ட காலத்தில் நான் முதல்வராக இருந்தேன்.
அப்போதும் சரி, இப்போதும் சரி ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படுவேன். பாஜக எனக்கு பின்னால் இருப்பதாக கூறுவது வடிகட்டிய பொய்.
சசிகலா பற்றி 10 சதவீத உண்மைகளை வெளியே சொல்லியுள்ளேன். 90 சதவீத உண்மைகளை என்னுடனே வைத்துக்கொள்கிறேன். என்றார். ஜெயலலிதா சிகிச்சை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் பரவலாக நாட்டு மக்களிடையே உள்ளது. அதை போக்க வேண்டிய கடமை, அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்கிறேன். உச்சநீதிமன்றத்தில் தற்போது பொறுப்பிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்ப்டடு, உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வழி செய்யப்படும்.