50,000 ரயில் பெட்டிகள் தயாரித்து சென்னை ஐசிஎப் சாதனை... ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை 50 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் ரயில் பெட்டி தொழிற்சாலை ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் உள்ள 50 ஆயிரமாவது ரயில் பெட்டியை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுரேஷ் பிரபு, ஐசிஎப் நிறுவனம் இதுவரை 50 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை புரிந்துள்ளது. இந்த நாள் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாகும். இதற்காக ஐசிஎப் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாதனை மைல்கல்
முதல் பெட்டி தயார் செய்ததற்கும், 50 ஆயிரமாவது பெட்டி தயார் செய்ததற்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. அடுத்து ஒரு லட்சமாவது பெட்டி எப்படி இருக்கும் என தற்போதே திட்டம் தீட்டி வருகிறோம். மேலும் இதன் மூலப் பொருள் தன்மை குறித்து ஆராய்வதற்காக பனாரஸ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகள்
ரயில் படிகள், கழிவறை, குப்பைத் தொட்டி உள்பட உள்கட்டமைப்பு வசதிகளில் மாற்றம் செய்வதற்காக தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
50000மாவது பெட்டி
ரயில்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், சூரிய ஒளி மூலம் மின்சக்தி பெறுவதற்காக இந்திய அறிவியல் கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
சி.சி.டிவி கேமரா
ஐசிஎப் நிறுவனம் தயாரித்துள்ள 50 ஆயிரமாவது ரயில் பெட்டியில் நவீன வசதியுடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நவீன கழிப்பறை வசதியும் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.