மத்திய அரசு மீது குறை சொல்வதா? ஹைகோர்ட்டில் சபாநாயகர் வக்கீல் அரிமா சுந்தரம்
18 எம்எல்ஏக்கள் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசு டெல்லியில் இருந்து இயக்கப்படுவதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் கூறியதற்கும் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித், ராகேஷ் திரிவேதி, அரிமா சுந்தரம், துஷ்யந்த் தவே ஆகியோர் வாதாடி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி துரைசாமி முன்பு நடந்து வருகிறது. முன்னதாக வாதாடிய டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞரான துஷ்யந்த் தவே சபாநாயகர் தனபாலின் உத்தரவு சட்டத்திற்கு எதிரானது என வாதாடினார்.
அரசு ஊழல் செய்வதால் எதிர்ப்பு
முதல்வரை மாற்றவே 18 பேரும் கோரினார்கள் என்று கூறினார். ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தை துஷ்யந்த் தவே வாசித்துக் காட்டினார். 18 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக அரசுக்கு எதிராக செயல்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் செய்வதால் தான் எதிர்க்கிறோம் என்று துஷ்யந்த் தவே வாதம் செய்தார்.
டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது
தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் டெல்லியில் உள்ள சிலருக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தினகரன் தரப்பு வழக்கறிஞரான தவே கூறினார்.
மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல
இதனை எதிர்த்த சபாநாயகர் தனபால் தரப்பு வழக்கறிஞரான அரிமா சுந்தரம், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல என்றார். வழக்கறிஞர்கஙள் மத்திய அரசு மீது குறை சொல்லக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தேவையில்லாத வாதங்கள்
மேலும் தினகரன் தரப்பு வழக்குக்கு தேவையில்லாத வாதங்களை முன்வைப்பதாகவும் அரிமா சுந்தரம் வாதிட்டார். எதியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும் சபாநாயகர் வக்கீல் அரிமா சுந்தரம் தெரிவித்தார்.
இடைக்கால தடை விதிக்கக்கூடாது
அரசு மற்றும் சபாநாயகர் மீது குற்றச்சாட்டுக்களை வைப்பதால் விளக்க அளிக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞரான அரிமா சுந்தரம் தெரிவித்துள்ளார். மேலும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கூடாது என்றும் அரிமா சுந்தரம் வாதிட்டு வருகிறார்.