ஜெயலலிதாவிற்கு எதிராக இலங்கை சதி!: நாஞ்சில் சம்பத்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பின் பின்னணியில் சர்வதேச சதி நடந்துள்ளது, என அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக கூறி மதுரையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்,
சுப்பிரமணியசாமியால் கற்பனையால் தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்ற தகவல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மனதை புண்படுத்தியுள்ளது.
தீர்ப்பை நீதிபதி படித்தபோது, "நீங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்," என ஜெயலலிதாவைப் பார்த்து கூறியுள்ளார். எதை வைத்து இப்படி கூறினார்.
சர்வதேச சதி
வதோதரா, ராஜஸ்தான், உ.பி.,யில் நடந்த இடைத்தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஜெயலலிதா கைது பின்னணியில் சர்வதேச சதி நடந்துள்ளது.
இலங்கை சதி
தமிழ் இனத்தை திட்டமிட்டு அழித்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், ஐ.நா.வில் சிலர் ராஜபக்சேவுடன் கை குலுக்குகினர்.
முன்பே எப்படி தெரியும்?
பெங்களூரு நீதிமன்றத்தில் தீர்ப்பு படிப்பதற்கு முன்பே கோபாலபுரத்திற்கு ஜெயல்லிதாவிற்கு கொடுக்க இருந்த தண்டனை விவரம் எப்படி கசிந்தது.
இனப்பகையால் சதி
காவிரி பிரச்னை உள்ளிட்ட பல தமிழக உரிமைகளை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா. இனப்பகையாலும் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். மூன்றடுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் சிறைக்குள் ஜெயலலிதாவிற்கு கொடுமை நடக்கிறதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
நீதி கேட்ட இடம்
எப்படி இருந்தாலும் வழக்கை சட்டப்படி சந்தித்து, ஜெயலலிதா விடுதலையாவார். அநீதிக்காக கண்ணகி நீதி கேட்ட இந்த வைகை கரையில், நாங்களும் நீதி கேட்டுள்ளோம். விரைவில் வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுக்கும் நேரம் வரும் என்றார் நாஞ்சில் சம்பத்.
பாமக வன்முறையாளர்கள்
அதேபோல நேற்று இரவு தனியார் தொலைக்காட்சியில் பேசிய சம்பத், அதிமுகவினர் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது உயிரோடு எரித்தார்கள். ஆனால் காஞ்சிபுரம், காரியாபட்டியில் பேருந்தை எரித்தது அதிமுகவினர் அல்ல என்றும் கூறினார்.