சர்வதேச கள்ளநோட்டு கும்பல் தமிழகத்தில் முகாம்? கானா நாட்டு இளைஞர் கைதால் கன்னியாகுமரியில் அதிர்ச்சி
சர்வதேச கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் தமிழகத்தில் முகாமிட்டுள்ளதாக சந்தேகம் அடைந்துள்ள போலீசார் அது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி: சர்வதேச கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த கானா நாட்டு இளைஞர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சர்வதேச கள்ளநோட்டுக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் சர்வதேச கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த கானா நாட்டு இளைஞர் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமரவிளை சோதனைச் சாவடியில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் சோதனையிட்ட மதுவிலக்கு போலீசார், வெளிநாட்டு இளைஞர் ஒருவரின் உடமைகளை சோதித்தனர். அதில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும், கள்ள நோட்டுகள் தயாரிப்புக்கான பொருள்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த இளைஞரை கைது செய்து விசாரித்ததில், அந்த நபர் கானா நாட்டைச் சேர்ந்த ரோப் எடிசன் என்று தெரியவந்தது. ஆப்பிரிக்காவின் ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளுடன் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
சர்வதேச கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இவருடன் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்க, ரோப் எடிசன் கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து கேரளா கொண்டு செல்லப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் சர்வதேச கள்ள நோட்டுக் கும்பல்கள் இந்தியாவில் எங்கெங்கு பதுங்கியுள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.