தமிழகம் வந்தனர் மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள்... லக்கானியுடன் இன்று ஆலோசனை
சென்னை: தமிழகம் வந்துள்ள மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்தமாதம் 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், 100 சதவீத வாக்குப்பதிவுடனும் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதன்படி, வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் 12 பேர் நேற்று தமிழகம் வந்துள்ளனர். வழக்கமாக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னரே தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு இத்தகைய தேர்தல் பார்வையாளர்கள் வருகை தருவது நடைமுறை. ஆனால், அதிலுருந்து வேறுபட்டு முதன்முறையாக வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நேற்று தமிழகம் வந்தனர்.
அந்த தேர்தல் பார்வையாளர்களில் 10 பேர் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள். ஒருவர் ஐ.பி.எஸ். அதிகாரி. ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுடன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்துகிறார்.
இது குறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், "மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களை கொண்ட மண்டலம் மற்றும் சென்னை, மதுரை, கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரிந்து செயல்படுவார்கள்.
ஐ.பி.எஸ். அதிகாரி சி.வி. ஆனந்த், ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பிரசென்ஜித் சிங், சஞ்சீவ் ஆகியோர் விழுப்புரம், திருச்சி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மண்டலத்துக்கும், சென்னை மண்டலத்துக்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ராஜீவ் சின்கா, அனுஜ் அரோரா, பி.வி.ராவ் ஆகியோரும், மதுரை மண்டலத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.பாசந்தியா, ஐ.எஸ்.ஆர். அதிகாரிகள் சுனில் சர்மா, சாஷி பூஷன் சுக்லா ஆகியோரும், கோவை மண்டலத்துக்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மனாஸ் ஆர்.மொகந்தி, விலாஸ் வி.ஷிண்டே, சஞ்சீவ் கோயல் ஆகியோரும் சிறப்பு செலவின பார்வையாளர்களாக செயல்படுவார்கள்.
இவர்கள் அனைவரும் நேற்று தமிழகம் வந்து விட்டனர். சென்னை மண்டலத்தை தவிர மற்ற மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் இன்று ஆலோசனை நடத்துவார்கள்.
சென்னை மற்றும் திருச்சி, புதுச்சேரி மண்டலத்துக்கான தேர்தல் பார்வையாளர்கள் 6 பேர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு என் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
மத்திய சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துவார்கள், தொகுதியில் எங்கெங்கு பணம் பட்டுவாடா நடக்கலாம்?. எங்கெங்கு பணம் நடமாட்டம் அதிகம் என்பன போன்ற தகவல்கள் அந்தந்த பகுதி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் உள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில், சிறப்பு பார்வையாளர்கள் விசாரணை நடத்துவார்கள். தேவைப்பட்டால் சோதனையும் நடத்துவார்கள்.
அந்த தகவல்களை மத்திய பார்வையாளர்கள் உடனுக்குடன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு அறிக்கையாக அனுப்புவார்கள். இவர்கள் மாவட்ட கலெக்டர்களுடனும் இணைந்து செயலாற்றுவார்கள்.
மத்திய பார்வையாளர்கள் 24-ந்தேதி வரை தமிழகத்தில் பணியாற்றுவார்கள். பொதுப்பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் உள்பட அனைத்து மத்திய தேர்தல் பார்வையாளர்களும் இனி படிப்படியாக தமிழகம் வருவார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.