மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு... பாஜகவின் ராஜதந்திர பிளான்?
திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு தமிழக மக்களின் அபிமானத்தை பெருவதற்கான சந்திப்பாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு தமிழக மக்களின் அபிமானத்தை பெருவதற்கான பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலின் போக்கை இந்த சந்திப்பு மாற்றுமோ, கூட்டணி மாற்றம் ஏற்படுமோ என்றெல்லாம் பல கருத்துகள் நிலவுகின்றன.
ஆனால் பாஜகவை பொறுத்தவரை அதிமுகவின் மீது ஏறி சவாரி செய்வதே அவர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தலைமையில்லாமல் இருக்கும் அதிமுகவை மட்டுமே பாஜக தாங்கள் நினைத்தபடியெல்லாம் ஆட்டிவைக்க முடியும் என்பது தான் பாஜகவின் எண்ணம். அப்புறம் எதற்கு இந்த சந்திப்பு என்கிறீர்களா?
அபிமானத்தை மாற்ற முயற்சி
நிச்சயமாக இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பே. இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் தனக்கென தனிச் செல்வாக்கு கொண்டுள்ளார், அவரை சந்தித்து நலம் விசாரிப்பதன் மூலம் பிரதமர் மோடி மீதான தமிழக மக்களின் அபிமானம் சிறிதேனும் மாறலாம் என்பதே அந்த பிளான்.
அதிமுகவினருக்கு எச்சரிக்கை
அதே போன்று தமிழகத்தை பொறுத்தவரை தான் எந்த கட்சிக்கும் சார்புடையவர் அல்ல, நடுநிலை அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் அதிமுகவினர் தொடர்ந்து எல்லாத்தையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று வெளிப்படையாக பேசி வருவது, பிரதமருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
என்ன வேண்டுமானாலும் செய்வேன்
எனவே அதிமுகவினரை எச்சரிக்கும் விதமாக ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என மிரட்டுவதற்காகவும் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. அதே சமயம் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் பிரதமருடன் ஆளுநர் வந்திருந்த போதும் முதல்வர், துணை முதல்வர் இதில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
வாய்ப்பே இல்லை
எதுஎப்படியாக இருந்தாலும் தொடர்ந்து தமிழகத்தில் திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். அத்தகைய சூழலில் தாங்கள் சொல்லியபடியெல்லாம் ஆடும் அதிமுகவை விட்டு விட்டு திமுக பக்கம் பாஜக போவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.