ரஜினியும், கமலும் சொல்லி வச்ச மாதிரி பேசுவதை கவனித்தீர்களா?
ஊழல்வாதிகளுக்கு தங்கள் பக்கத்தில் இடமில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில் இன்ற நடிகர் கமல்ஹாசனும் அதையே குறிப்பிட்டுள்ளார், இவர்களின் தியரி ஒர்க்அவுட் ஆகுமா?
Recommended Video
சென்னை : ஊழல்வாதிகளை ஏற்கும் பேச்சிற்கே இடமில்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் தனக்கு அருகில் வரவே முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார். ஸ்டார்களின் இந்த தியரி அரசியல் களத்தில் வொர்க் அவுட் ஆகுமா?
தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பரபரப்பாக இருந்துகொண்டே இருக்கும் ஒரு விஷயம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தொண்டர்களுடனான இறுதிநாள் சந்திப்பின் போது ரசிகர்கள் மத்தியில் பேசும் போது, போருக்குத் தயாராக இருங்கள் போர் வரும் போது சொல்கிறேன் என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து போர் முரசு கொட்டினார்.
ரசிகர்கள் பலருக்கு கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசை இருப்பது தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. ஒருவேளை அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் எனக்கு அருகில் கூட வைத்துக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார்.
வெளியே போகமாட்டேன்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கான நிதியை பெறுவதற்காக இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளது. அப்போது பேசிய அவர் நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனி வரலாமா வேண்டாமா என்று கேட்பதற்கான நேரமில்லை.
ஊழல்வாதிகள் வர முடியாது
நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன். இதிலிருந்து வெளியே போக மாட்டேன் என்றார். ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்ததாலேயே தான் இப்போது இந்த மேடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே ஊழல் செய்தவர்களுக்குத் தன்னுடன் நிச்சயம் வர முடியாது என்றும் கூறினார். 234 தொகுதிகளிலும் ஊழல்வாதிகளை வேட்பாளர்களாக நிறுத்தப்போவதில்லை என்றார்.
மக்களை பாதிக்கும் ஊழல் அஸ்திரம்
ஊழல்வாதிகளுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை சினிமாவில் செய்ததை விட மோசமாக செய்வேன் என்றும் கமல்ஹாசன் கூறினார். அரசியல் கட்சி தொடங்க வருபவர்கள் அனைவருமே கையில் எடுக்கும் ஒரு அஸ்திரம் என்றால் அது மக்களை வெகுவாக பாதிக்கும் ஊழலை ஒழிப்பேன் என்பது தான். நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வரும் போதும் ஊழலை ஒழிப்பது மட்டுமே தன்னுடைய நோக்கம் என்றார்.
ஊழல் ஒழிக்க என்ன செய்தார்கள்
விஜயகாந்த் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று மக்களும் அவருக்கு வாய்ப்பு அளித்தார்கள். முதலில் 29 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வாய்ப்பளித்தாலும் மக்களின் விருப்பப்படி செயல்படவில்லை என்பதால் தற்போது அந்த கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பது தான் நிதர்சனம். ஊழலை ஒழிப்பதற்காக அந்தக் கட்சி எடுத்த முயற்சி என்ன என்பதும் கேள்விக்குறிதான்.
நிஜத்தில் முடியுமா?
மாநில அளவிலான கட்சிகள் மட்டுமல்ல ஊழலை எதிர்த்து களத்தில் போராட்டம் நடத்திய லோக்பால் அமைப்பில் இருந்து தனிக்கட்சி தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் கட்சிக்கும் இதே நிலை தான். தலைவர்களால் கொள்கைகள் மட்டுமே வகுக்க முடியும் அவர்கள் கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை என்று சொன்னாலும் அது தவிர்க்க முடியாது என்பதே நிகழ்கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
கட்சி தொடங்கிய பின்னர் தெரியும்
உண்மை நிலை இப்படி இருக்க ஊழல்வாதிகளுக்கு இடமே இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் சொல்வது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்ற கேள்வியும் எழுகிறது. மக்களை ஈர்ப்பதற்கான ஒரு ஸ்டண்ட் தானா அல்லது உண்மையிலேயே இந்த தியரி ஒர்க்அவுட் ஆகுமா என்பது கமல் கட்சி தொடங்கிய பின்னரே மக்கள் அரங்கில் தெரிய வரும்.