இதுவா நிர்வாக திறமை? ஆக்கிரமிப்பு நிலம் என்று அரசுக்கு தெரிந்தது முதல்வருக்கு தெரியாதா?
அரசுக்கு இதுநாள் வரையில் ஆக்கிரமிப்பு குறித்து எதுவும் தெரியாதா? அல்லது முதல்வர் பழனிச்சாமி சென்று வந்த பிறகு கடந்த ஒரு வாரத்திற்குள்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவரம் அரசுக்கு கிடைத்ததா?
சென்னை: ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரியன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்குபெற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆதி யோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், பழங்குடியின அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஈஷா யோக மையம், 109 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றம்சாட்டியுள்ளது அரசு.
அதாவது, அரசின் தலைமை பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஒரு வாரத்திற்கு முன்பு சென்று வந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது என்று இன்று அரசே கூறுகிறது.
அப்படியானால், அரசுக்கு இதுநாள் வரையில் ஆக்கிரமிப்பு குறித்து எதுவும் தெரியாதா? அல்லது முதல்வர் பழனிச்சாமி சென்று வந்த பிறகு கடந்த ஒரு வாரத்திற்குள்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவரம் அரசுக்கு கிடைத்ததா?
இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையிலுள்ள நிலையில், ஏற்கனவே அரசிடம் ஆக்கிரமிப்பு குறித்த தகவல் இருந்திருக்க வேண்டும். ஆனால் முதல்வருக்கு தெரியாமல் சட்டத்துறை இத்தகவலை மறைத்துவிட்டதா? அந்த அளவுக்கு விவரம் தெரியாத அப்பாவியா நமது முதல்வர்?
இதுபோன்ற கேள்விகள் சாமானியர்களுக்கும் எழத்தொடங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அரசே கூறிவிட்ட ஒரு இடத்திற்கு ஏன் சென்று முதல்வர் பங்கேற்றார்.. அப்படி பங்கேற்றால் ஆக்கிரமிப்புக்கு அரசே அங்கீகாரம் கொடுத்ததை போலவாகிவிடுமே என்பது குறித்தெல்லாம் முதல்வர் பதிலளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.