ஐஎஸ்எல் கால்பந்து... கேரளாவை வீழ்த்தி 2- வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது
கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி ,ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கேரளா அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் அரையிறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. 37-வது நிமிடத்தில் கேரள அணியின் ரபி ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா அணியின் சிரினோ ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தன. ஆனால் இரு அணி வீரர்களின் முயற்சிகளுக்கும் பலன் கிட்டவில்லை. இதனால் இரண்டு முறை தலா 15 நிமிடங்கள் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
கூடுதல் நேரத்திலும் இரு அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் கேரளா அணி 3 கோல்களும், கொல்கத்தா அணி 4 கோல்களும் அடித்தன.
இதன் மூலம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கடந்த மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சொந்த மண்ணில் கேரளா அணி வெற்றியை தவறவிட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.