ஊழல்வாதிகளிடம் பணம் வாங்கி கோடீஸ்வரர்களான போலீசார்.. ஐடி ரெய்டில் அதிர்ச்சி தகவல்
லஞ்சம் பெற்றுக்கொண்டு கருப்பு பண முதலைகளுக்கு துணை போன போலீசார் பட்டியலை ஐடி அதிகாரிகள் தயாராக வைத்துள்ளனராம்.
சென்னை: லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு வருமான வரி ஏய்ப்புக்கு துணை போன தமிழக போலீஸ் அதிகாரிகள் பலரும் விரைவில் வருமான வரித்துறை கையில் சிக்க உள்ளனராம்.
வருமான வரித்துறை போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியது. அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் பலரும் வருமான வரித்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
இதன் உச்சமாக, தலைமைச் செயலராக பதவி வகித்த ராம மோகன ராவ் வீட்டில் ஐடி அதிரடி சோதனையை நடத்தியது. இந்நிலையில் ஐடி துறையின் அடுத்த பார்வை சிறப்பு போலீஸ் படை பக்கம் திரும்பியுள்ளதாம்.
பணம் பறிமுதல்
சேகர் ரெட்டியின் தொடர்புகளில் சவுகார் பேட்டை தீபக் என்பவர் உள்ளார். அதிகாரிகள் இங்கும் ஆய்வு மேற்கொண்டனர். தீபக்கின் பிரமாண்ட நிறுவனத்தில் நடந்த மூன்று மணி நேர சோதனையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய ரூபாய் நோட்டுகளும் கட்டுக் கட்டாக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
நகைக்கடைகள்
வேப்பேரியில் உள்ள தீபக்கின் வீட்டில் நடந்த சோதனையிலும் கணக்கில் வராத 6 கிலோ தங்கம், மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் அங்கேயும் சிக்கியுள்ளன. அடுத்த ரெய்டு 'இரானி' நகைக்கடையில் ஆரம்பித்தது. சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள 'இரானி' நகைக்கடை மற்றும் கடையின் உரிமையாளர் வீடுகளிலும் அடுத்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து பெறப்பட்டது, தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொண்டுவரப்பட்டவையா? போன்ற விசாரணை நடவடிக்கைகள் போய்க்கொண்டு இருக்கிறது.
போலீசார் பற்றி டைரி
சென்னை சவுகார்பேட்டை மற்றும் பாரிமுனை பகுதிகளில், ஐ.டி.அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. நகை வியாபாரிகளுடன் நெருக்கமான உறவில் இருக்கும் சில போலீசாரின் தொடர்பை உறுதிப்படுத்தும் டைரி, ஐ.டி அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது.
போலீசாரின் லஞ்சம்
வருமான வரித்துறையினரின் ரெய்டின் போது ராம மோகனராவிடமும் இதே போன்று ஒரு டைரி கிடைத்த நிலையில் இந்த டைரியும் முக்கியத்துவம் பெறுகிறது. காவல்துறையில் தனிப்படை என்ற பெயரில் இயங்கும் சிலர் அடிக்கடி நகைக் கடைகள், மற்றும் சட்டத்துக்குப் புறம்பான ஆட்களிடம் ரெய்டு நடத்தி, சொத்துகளை குவித்து வைத்துள்ளனர்.
போலீஸ் டீம்
இந்த சிறப்பு போலீஸ் டீம்களை இயக்கும் மேலதிகாரிகளின் சொத்துப் பட்டியல் அதை விட பல மடங்கு எகிறிப் போய் இருக்கிறதாம். இப்போது நகைக் கடைகளில் சோதனை நடத்திய வருமானவரி புலனாய்வுத்துறையிடம் "இவ்வளவு நாட்கள் (போலீஸ் ஸ்பெஷல் டீம்) அவர்களுக்கு குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டுத்தான் தொழில் செய்தோம், அதே போல் நீங்களும் வாங்கிக் கொண்டு எங்களை வாழவிடுங்கள்" என்று சிலர் கூறியதால் ஐடி அதிகாரிகள் ஆடிப்போய்விட்டனராம்.
பட்டியல் ரெடி
அவர்களிடம் பக்குவமாக பேசி, பணம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் யார், யார் என்ற தகவலை ஐடி அதிகாரிகள் கறந்துள்ளனர். எனவே அடுத்ததாக ஐடி அதிகாரிகளின் பிடியில் ஊழல் கறைபடித்த போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே துணை ராணுவ பாதுகாப்புடன் தொடர்ந்து ரெய்டுகளை நடத்த ஐடி துறை முடிவு செய்துள்ளதாம்.