போயஸுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி கொடுத்த வாக்கு மூலம்- சேலம் கூட்டுறவு வங்கியில் ஐடி ரெய்டு
போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிபிஐ போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
சேலம்: போயஸ்கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. 131 கோடி ரூபாய் பணத்தில் 92 கோடி புது ரூபாய் நோட்டுகள் ஆகும். இதனையடுத்து சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டியும் சீனி வாசலு ரெட்டியும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றது. ஊடகங்களின் கவனம் முழுக்க சென்னை தலைமைச் செயலாளர் வீட்டின் மீது இருக்க, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். விடிய, விடிய நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் 10 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். அதே போன்று சேலம் புறநகர் ஜெ. பேரவை செயலாளரும், கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவன் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. சேலம், திருச்சி, சென்னையை சேர்ந்த 20 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வங்கியின் 64 கிளை மேலாளர்களை அழைத்து வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களை பெற்று விடிய விடிய விசாரணையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வங்கி கணக்கு, வரவு செலவு, தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை செய்தது தொடர்பான ஆவணங்கள் உட்பட ரசீதுகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கி தலைவர் இளங்கோவன் அமைச்சர் ஒருவர் நெருக்கமானவர் என்பதால் சேகர் ரெட்டி கொடுத்த வாக்குமூலத்தை வைத்து இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையால் மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.