120 நாட்கள் கண்காணிப்புக்குப் பின் வளைக்கப்பட்ட விஜயபாஸ்கர்- ஜனாதிபதி தேர்தல் வரை தொடரும் ரெய்டு!
அமைச்சர் விஜயபாஸ்கரை 120 நாட்கள் தீவிரமாக கண்காணித்த பின்னரே அதிரடியாக அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாம்.
சென்னை: அப்பல்லோவில் ஆடிய ஆட்டத்தைத் தொடர்ந்தே விஜயபாஸ்கருக்கு குறிவைத்ததாம் மத்திய அரசு. சேகர் ரெட்டி விவகாரத்துக்குப் பின்னர் விஜயபாஸ்கரை தொடர்ந்து கண்காணித்து வந்து தற்போது வசமாக ஏராளமான ஆவணங்களுடன் வளைத்திருக்கிறதாம் வருமான வரித்துறை.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் அனைவரையும் அடியாட்கள் மூலம் கண்காணித்தவர் விஜயபாஸ்கர் என உண்மையைப் போட்டுடைத்தார் மாஜி முதல்வர் ஓபிஎஸ். கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை சிறை வைத்ததிலும் விஜயபாஸ்கரின் பங்கு நாடறிந்தது.
முன்னதாக சேகர் ரெட்டி சிக்கியபோதே விஜயபாஸ்கர் குறித்து அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டாராம். தமது மணல் குவாரிகளில் விஜயபாஸ்கர் ஒரு சைலண்ட் பார்ட்டனர்...அவர்தான் சசிகலா கோஷ்டிக்கு ஆல் இன் ஆல் என பக்காவாக போட்டுக் கொடுத்திருக்கிறார் சேகர் ரெட்டி.
தீவிர தொடர் கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கரை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது வருமான வரித்துறை. வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஜெனரல் முரளிகுமார் சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் தொடர்ந்து முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தி வந்திருக்கிறார்.
120 நாட்கள் கண்காணிப்பு
இந்த கண்காணிப்பில் பல மூத்த அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்படி 120 நாட்கள் தொடர்ச்சியாக விஜயபாஸ்கரை கண்காணித்த நிலையில்தான் வருமான வரிச் சோதனை அதிரடியாக நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனராம்.
சேகர் ரெட்டி வழக்குகளில்...
தற்போதைய ரெய்டு படல் அப்படியே முடிந்துபோய்விடாதாம். சேகர் ரெட்டியை கைது செய்து அவர் மீது போடப்பட்ட அத்தனை வழக்குகளும் விஜயபாஸ்கர் மீது பாய்வதற்கான முகாந்திரம் உள்ளதாம்.
சிக்கும் 4 அமைச்சர்கள்
மேலும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், தென்மாவட்ட புள்ளிகள் பலரும் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து சிக்க உள்ளனராம். குறிப்பாக 4 அமைச்சர்களை கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறது வருமான வரித்துறை.
இன்னும் 2 மாதத்துக்கு பீதி...
இந்த அதிரடி ரெய்டு படலம் என்பது ஜனாதிபதி தேர்தல் வரை அதாவது இன்னமும் 2 மாத காலத்துக்கு தொடர்ந்து நீடிக்கவே செய்யும் என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள். இதனால் அமைச்சர்கள் பலரும் எந்த நேரத்தில் ரெய்டு வருமோ என பீதியில் இருக்கின்றனராம்.