ரெய்டின் போது மறைக்க முயன்ற ஆவணமும் இருக்கிறது...வசமாக சிக்கும் விஜயபாஸ்கர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது குறித்த ஆதாரம் உறுதியாகி உள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.
சென்னை : வருமான வரி சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் எடுத்து ஓடிய ஆவணங்களின் விவரங்கள் ஏற்கனவே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் திரட்டியது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 8-ந்தேதி அன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பி ஓடிய டிரைவர்
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போது, அமைச்சரின் உதவியாளர் ஒருவர் ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு ஓடியதும் அவரை பாதுகாப்புப் படையினர் துரத்திய செய்தியும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தது. கார் டிரைவரிடம் அவர் கொடுக்கும் ஆவணங்கள் மதில் சுவருக்கு எதிராக வீசப்படும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
என்ன ஆவணம்?
இப்படி வருமானவரி அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக மறைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இப்படி மறைக்கப்பட்ட ஆவணங்கள் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி பலமாக எழுந்தது. அது தொடர்பான மர்மமும் நீடித்து வந்தது.
செல்போனில் படம்
இந்நிலையில் ஆவணங்களை பறிமுதல் செய்த வருமான வரி அதிகாரிகள் அமைச்சரை 2 முறை விசாரணைக்கு அழைத்தனர். இந்த நிலையில், மாயமான முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட ஆவணங்களை வருமானவரி துறை அதிகாரிகள் முன்கூட்டியே கைப்பற்றி, அதனை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
சிக்கினர்
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்தவர்கள் புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து ஆவணங்களை மறைத்து எடுத்துக் கொண்டு வெளியில் ஓடி உள்ளனர். ஆனால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் அனைத்தும் வருமானவரி துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக செல்போன் மூலமாகவே அனுப்பப்பட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போதே இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஒப்புதல்
வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றிய முக்கிய ஆவணங்களில் விஜயபாஸ்கர் கையெழுத்து உள்ளதோடு ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன. விசாரணையின் போது விஜயபாஸ்கர் இதனை ஒப்பு கொண்டதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விஜயபாஸ்கருக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தும் வரிசைகட்டி நிற்பதால், அவர் மீதான பிடி இறுகுவதாக கூறப்படுகிறது.