வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் முடிவு... தலைமைச் செயலாளருடன் தீபா திடீர் சந்திப்பு!
சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஜெ. தீபா இன்று சந்தித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் முடிவு குறித்து ஜெ. தீபா இன்று தலைமைச் செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தலைமைச் செயலாளர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 7ம் தேதியே ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் ஒத்தரவிட்டது, ஆனால் அப்போது அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் நவம்பர் 20ம் தேதி ஆஜராக உத்தரவிட்ட நோட்டீஸையும் தீபா பின்பற்றவில்லை. அவருக்கு பதிலாக தீபாவின் வழக்கறிஞர் மட்டுமே தலைமைச் செயலாளர் முன்பு ஆஜரானார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஜெ. தீபா இன்று சந்தித்துள்ளார். ஜெயலலிதா இல்லம் தங்களது பூர்வீக சொத்து என்பதால் அதை தங்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்ற அப்போது அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.