ஜல்லிக்கட்டுக்கு தடை: பாலமேடு வாடிவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்து துக்கம் அனுசரிப்பு!!
சென்னை: துக்கம் நடந்த வீட்டில்தான் ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மக்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். கறுப்புக்கொடி ஏற்றி போராடும் பாலமேடு பகுதிவாசிகள், தங்களின் எதிர்ப்பு தெரிவித்து பாலமேட்டில் உள்ள வாடிவாசல் முன்பு, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15 முதல் 17வரை மூன்றுநாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் என கடந்த 7ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவிக்கவே, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பாலமேட்டில் துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டி உள்ளனர். இன்று காலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வாடிவாசல் அருகே வந்தனர்.
பின்னர் அவர்கள் வாடிவாசல் அருகே ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது சில பெண்கள் சாமியாடி அருள்வாக்கு கூறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமேட்டில், பஸ் ஸ்டாண்ட் முதல் வாடிவாசல் வரை மாடுபிடி வீரர்களும், காளை வளர்ப்போர்களம் ஊர்வலமாக சென்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிவாடிவாசல் முன்பு, பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தியதாலும், பொதுமக்களின் தர்ணா காரணமாகவும் பரபரப்பு ஏற்பட்டது.