மதுரையில் 3-வது நாளாக புரட்சியாளர்கள் பிடியில் கோவை ரயில்! தொடரும் ரயில் சேவை துண்டிப்பு!
மதுரையில் 3வது நாளாக ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் கோவை ரயிலை சிறைபிடித்து வைத்துள்ளனர். மதுரை நகரத்துக்கான ரயில் சேவை 3-வது நாளாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனா தென்மாவட்ட ரயில் சேவை முடங்கியுள்ளது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கான சென்னை மெரினாவின் போர்க்களத்தைபோல மதுரை தமுக்கம் மைதானமும் லட்சக்கணக்கானோரால் திணறி வருகிறது. மதுரையில் உச்சகட்டமாக கோவை-நாகர்கோவில் ரயிலை 3-வது நாளாக புரட்சியாளர்கள் சிறைபிடித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மதுரைக்கு 3-வது நாளாக ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த உறங்கா நகரம் மதுரையின் வீதிகள் தோறும் போர் முழக்கங்கள்... ஜல்லிக்கட்டுக்கான புரட்சியில் மதுரை நகரம் ஒட்டுமொத்தமாக தம்மை ஒப்படைத்துக் கொண்டுவிட்டது.
இந்த போராட்டத்தின் உச்சமாக மதுரை செல்லூர் ரயில்வே பாலத்தில் கோவையில் இருந்து வந்த நாகர்கோவில் ரயிலை புரட்சியாளர்கள் மறித்தனர். 3 நாட்களாக இந்த ரயிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் புரட்சியாளர்கள்.
அதேபோல் மதுரை ரயில் நிலையத்துக்கு வர கூடிய மற்றொரு ரயிலையும் புரட்சியாளர்கள் மறித்து வைத்துள்ளனர். இதனால் 3-வது நாளாக மதுரைக்கான ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தின் முக்கிய ரயில் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் 5 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.