ஜல்லிக்கட்டு.. அரசியல் சட்டம் 17வது பிரிவின் கீழ் அவசரச் சட்டம் கொண்டு வரலாம்.. ஆனால்!
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தாலும் அதனால் பலன் இருக்காது. மாறாக அதுவும் கூட தடை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசு நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக பலரும் கருதுகின்றனர்.
தற்போது தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜகவினரும், மத்திய அமைச்சர்களும் கூற ஆரம்பித்துள்ளனர். இதனால் தமிழக அரசு இதை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

28வது பிரிவு
அரசியல்சாசனச் சட்டத்தின் 28வது பிரிவு ஒரு மாநில அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வழி செய்கிறது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கோர்ட்டுக்குப் போனால் நிற்காது
இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனால் அது தாக்குப் பிடிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். நிச்சயம் அது ரத்து செய்யப்படும் அல்லது தடை விதிக்கப்படும என்றும் அவர்கள் சொல்கிறார்கள். மேலும் மாநில அரசு, கோர்ட்டின் கண்டனத்துக்கும் ஆளாக நேரிடும் என்பதும் சட்டு வல்லுநர்களின் வாதமாகும்.

திருவிழாக்கள்
28வது சட்டப் பிரிவின் கீழ் திருவிழாக்கள் என்ற ஒரு "ஐட்டம்" வருகிறது. இந்த ஐட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டு வந்து அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியும் என்று பலர் கூறுகிறார்கள்.

மோகன் பராசரன் கருத்து
இதுகுறித்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறுகையில், இப்படி அவசரச் சட்டம் பிறப்பித்தாலும் கூட அது பிராணிகள் வதைச் சட்டத்திற்கு முரணாகவே இருக்கும்.

சட்டத்தின் அம்சங்களை மீற முடியாது
பிராணிகள் வதைச் சட்டத்தின் அம்சங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த அவசரச் சட்டம் இருக்க முடியுமே தவிர அதை மீறி இருக்க முடியாது. அப்படிப் பார்க்கும்போது அவசரச் சட்டத்தால் தமிழக அரசுக்குத்தான் சிக்கல் வரும். ஜல்லிக்கட்டே கொடூரமானது என்று சுப்ரீம் கோர்ட் கூறி விட்ட நிலையில் எந்தப் பெயரிலும் அதை தமிழக அரசு அவசரச் சட்டத்தின் கீழ் நடத்துவது சாத்தியமில்லாதது என்றார் மோகன் பாரசரன்.

மத்திய அரசு செய்தது "பக்கா" அரசியல் - விஜயன்
மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் கூறுகையில், மத்திய அரசு அறிவிக்கையானது சட்டரீதியானது என்பதை விட அரசியல் ரீதியானது என்பதே உண்மை. அவர்கள் தெரிந்தேதான் இதைச் செய்துள்ளனர் என்றார் விஜயன்.

17வது பிரிவின் கீழ் கொண்டு வரலாம்
விஜயன் மேலும் கூறுகையில் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். அரசியல் சாசனத்தின் 28வது பிரிவை விட 17வது பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியும், அவசரச் சட்டமும் பிறப்பிக்க முடியும்.

ஒரு வாய்ப்பு உள்ளது
17வது சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவதாக இருந்தால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். முதலில் அதை ஆளுநருக்கு அனுப்பி, அதை அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவர் பார்த்துப் பரிசீலித்து ஒப்புதல் தர வேண்டும். ஆனால் ஒரு நாளில் இது நடக்க வாய்ப்பே இல்லை என்றார் விஜயன்.












Click it and Unblock the Notifications