ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கையாண்ட விதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 1991-96-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், சென்னை தியாகராயர் நகரில் உள்ள லெக்ஸ் பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை சிறுவழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம் மனுவை விசாரித்த சிறு வழக்குகளை விசாரிக்கும் தலைமை நீதிமன்றம், லெக்ஸ் நிறுவனத்தின் சொத்தை முடக்கி கடந்த 1997-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லெக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டி.சித்ரா மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இதையடுத்து சித்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், சொத்து முடக்கத்தை எதிர்த்து பெங்களூர் நீதிமன்றத்தில் சித்ரா மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த மனுவுக்கு முன்னுரிமை வழங்கி விசாரணைக்கு எடுத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
பெங்களூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இந்த உத்தரவின் அடிப்படையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், மனுதாரர் மனுவை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், அதனால் மனுதாரர் சித்ராவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தன்னுடைய மனுவை முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதா என்று விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ரா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.ஆறுமுகசாமி விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் சித்ரா தன் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யும் மனுவை முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு உத்தரவிடவில்லை என்று கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை பெங்களூர் நீதிபதி கையாண்டிருக்கும் முறையை பார்க்கும்போது, வருத்தம் அளிக்கிறது.
நீதித்துறையின் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் விதமாக, பிற மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும். எனவே, மனுதாரர் மேற்கொண்டு ஏதாவது நிவாரணம் கோரினால், அவர் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படியும் அறிவுறுத்தப்படுகிறார். இந்த மனுவை பைசல் செய்கிறேன்
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.