கூடியது அதிமுக பொதுக்குழு.. ஜெ. வை 6வது முறையாக முதல்வராக்குவோம் என தீர்மானம்
சென்னை: அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இறுதியில், ஜெயலலிதா சிறப்புறையாற்றுகிறார்.
கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவிற்கு அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
- ஜெயலலிதாவை 6-வது முறையாக தமிழக முதல்வராக்குவோம்.
- வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
- தமிழர்களின் பாரம்பரிய பண்பாடான ஜல்லிக்கட்டுவை நடத்த மத்திய அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.
- தமிழக மீனவர் பிரச்சனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
- மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு
- தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவுக்கு அதிகாரம்
என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.