வேட்பாளரே இல்லாமலே பிரச்சாரம் செய்த ஜெ... எல்லாம் இந்த 'இசி'யால் வந்த வினை!
கரூர்: நாடாளுமன்ற தேர்தலில் கரூர் அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு வாக்கு கேட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர் இன்றி வாக்கு கேட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, மேடையில் வேட்பாளர் இருந்தாலோ அல்லது வேட்பாளர்கள் பெயரை கூறி மேடையில் பிரச்சாரம் செய்தாலோ பொதுக் கூட்டத்திற்கான மொத்த செலவும் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தம்பித்துரை மிஸ்ஸிங்
இதனால், கரூர் தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் தம்பிதுரை பங்கு பெறவில்லை.
பெயர் சொல்லாமல் பிரசாரம்
மேலும், இக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசும் போது வேட்பாளரின் பெயரையும் கூறவில்லை.
பொத்தாம் பொதுவாக
ஆனால், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்ற வேண்டுகோளுடன் பிரச்சாரம் செய்தார்.
இவங்கள்ளாம் அப்படி இல்லை
அதேசமயம், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் வேட்பாளர்களை முன் வைத்து அறிமுகம் செய்து வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
ஹெலிபேடிலேயே காலில் விழுந்து கும்பிடு சாமி...
ஆனால் வேட்பாளர்கள், ஜெயலலிதாவுடன் மேடை ஏறுவதில்லையே தவிர, அதற்குப் பதில் ஜெயலலிதா ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஹெலிபேடிலேயே போய் அவரைப் பார்த்து காலில் விழுந்து கும்பிட்டு சடங்குகளையெல்லாம் முடித்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.