வறட்சி நீங்கி மழை பெய்ய வருணஜெபம்: மழை வருமா?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் கடும் வெயில் நிலவுவதால் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை பெய்ய வேண்டிய முக்கிய கோயில்களில் வருண ஜெபம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல இடங்களில் கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. தாமிரபரணி ஆற்றின் கரை பகுதியில் வசிக்கும் மக்கள் கூட குடிக்க தண்ணீ்ர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குடிதண்ணீர் இன்றி மக்கள் தவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து முக்கிய கோயில்களில் சிறப்பு வருண ஜெபம் இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு உத்தரவுப்படி இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.

நெல்லையப்பர் கோவிலில்
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பிரதோஷ நந்தி முன்பாக இந்த ஜெபம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நந்தியை சுற்றி புதிதாக தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது..

வருண ஜெபம்
இன்று அதிகாலை 5.05 மணிக்கு வருண ஜெபம் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சீதாள ரூபன ஏகாதச ருத்ரஜப பாராயணம், வருண ஜெபம், வருண சூக்தபாராயணம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி வருண பகவானை ஜெபித்து வருகின்றனர்.

மழைக்கான ராகங்கள்
மேலும் மழை பெய்ய வேண்டி அமிர்தவர்ஷினி, மேக வர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூபகல்யாணி உள்ளிட்ட மழைக்கான கானங்களை வயலின் மூலம் தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி ஆசிரியர் ஈஸ்வரனும், புல்லாக்குழல் மூலம் நெல்லை இசைப்பள்ளி மாணவர் இசக்கியப்பனும் இசைக்கின்றனர்.

குற்றாலத்தில் மழை
வருண ஜெபம் செய்வதற்கு முன்பாகவே கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் பகுதியில் மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.

நிரம்பிய மேட்டூர் அணை
கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வருணஜெபம் நடத்தப்பட்டது. ஓரளவிற்கு மழை பெய்தது. மேட்டூர் அணையும் நிரம்பி காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.

மழை வருமா?
அதே சமயம் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் நீராதாரங்கள் வறண்டு போயுள்ளன. எனவே ஏப்ரல் மாதமே வருண ஜெபத்தை தொடங்கிவிட்டனர். இம்முறை மழை வருமா? வருணபகவான்தான் மனது வைக்கவேண்டும்.












Click it and Unblock the Notifications