மருமகளிடம் தவறாக நடந்த மாமனார்... கட்சிப் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா!
சென்னை: சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜெ. பேரவை பிரமுகர், தனது மருமகளிடமே அத்துமீறி நடந்தது தொடர்பாக சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் மீது கோர்ட் உத்தரவுக்குப் பிறகு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த நபரை தற்போது அவர் வகித்து வந்த ஜெ. பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன் என்கிற சிங்காரம். இவர் பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும், மகன் விவேகானந்தனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. அத்தோடு, விவேகானந்தனின் மனைவிக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார் சிங்காரவேலன்.
சிங்காரவேலனின் இந்த அசிங்கமான செயலுக்கு அவரது மகள் சரண்யா, மருமகன் ரகு ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். அனைவரும் சேர்ந்து விவேகானந்தன் மனைவியை வீட்டை விட்டும் விரட்டியுள்ளனர். கொன்று விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து விவேகானந்தன் மனைவி பல்லாவரம் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் லோக்கல் போலீஸார் புகாரைக் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து தாம்பரம் கோர்ட்டுக்குப் போனார் விவேகானந்தன் மனைவி. அங்கு வழக்கை விசாரித்த கோர்ட், சிங்கராவேலன், சரண்யா, ரகு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.
டிஸ்மிஸ்
இந்நிலையில், பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த சிங்காரவேலனை நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பல்லாவரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஜி.சிங்காரவேலன் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.