என் பின்னால் வந்தவர்தானே இந்த சிதம்பரம்... ஜெ. தாக்கு
மதுரை: ஹெலிகாப்டரில் போனால் எப்படி மக்கள் பிரச்சினைகளை அறிய முடியும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார். அவருக்காக ஒரு காலத்தில் நானே பிரசாரம் செய்துள்ளேன். அவரும் என் பின்னால் வந்தவர்தான். அதை அவர் மறந்து விடக் கூடாது. காலநேர விரயம், காவலர் பணிச்சுமை ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில்தான் நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தை மேற்கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பாண்டி கோவில் பகுதியில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.
முதல்வரின் பேச்சிலிருந்து....
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு சின்னாபின்னமாக்கியது காங்கிரஸ் தலைமையிலான அரசு. இந்த ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகி விட்டது.
மத்தியில் பதவியில் உள்ள ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனிமேல் காங்கிரஸ் ஆட்சி அமையவே விடக்கூடாது. இந்த ஊழல் ஆட்சியில்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை குடும்ப ஆட்சி நடத்தி வரும் தி.மு.க. அங்கம் வகித்தது. எனவே, ஊழல் ஆட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 33 மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்து அ.தி.மு.க. அரசு. விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.
அதேபோல், தமிழர்களின் நலனை பாதுகாக்கும் அரசு மத்தியிலும் அமைய வேண்டும். மத்தியில் மக்கள் ஆட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அது அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும்.
2011 ல் நடந்த தேர்தலில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சி மலர செய்யுங்கள் என்று கேட்டேன். இது போல் என்னை தமிழகத்தின் முதல்வராக்கினீர்கள். அது போல் மத்தியில் உள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என கேட்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு எனது அ.தி.மு.க., அரசு, கடந்த 32 மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விலையில்லா அரிசி, முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் புனித பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்கு நிதி, கோயில்களில் அன்னதான திட்டம், நெசவாளர்களுக்கு பசுமையான 10 ஆயிரம் வீடுகள், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி 81 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 687 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 98 ஆயிரத்து 298 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. தானே புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
கருணாநிதியும், சிதம்பரமும் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர். வருமான வரி குறித்து தவறுதலாக தேர்தல் இடம் பெற்று விட்டது என்று கூறலாம். ஆனால் தான் செய்த ஏமாற்று வேலையை கேள்வி பதில் மூலம் அரசு ஊழியர்களை காரணமாக காட்டி, அவிழ்த்து விட்டு வருகிறார் கருணாநிதி.
தற்போது உள்ள வருமான வரிசட்டத்தின்படி, பணிக்கொடை , வைப்பு நிதி, விடுமுறை பயன்படுத்தாமல் இருந்தால் இவைகளுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இவ்வாறு பொய் பேசிவரும் கருணாநிதிக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும்.
தி.மு.கவினர் வெற்றி பெற்று என்ன செய்ய போகிறார்கள், மத்திய அரசுக்கு உத்தரவு போடும் உரிமை தி.மு.கவுக்கு கிடையாது என்று சிதம்பரம் சொல்கிறார். மக்கள் நல பணிகளுக்கு கருணாநிதி வாய் மூடி மவுனியாக இருந்து விடுவார். அப்போது தான் அமைச்சரவையில் நீடிக்க முடியும். அப்போதுதான் எதிரிகளை பழிவாங்க முடியும்.
இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போனதற்கு சிதம்பரம் தான் காரணம், திட்ட மதிப்பீட்டில் ஒதுக்குவதுபோல் ஒதுக்கி விட்டு திருத்தம் செய்து விடுகிறார் என்று நான் தெரிவித்திருந்தேன். ஆனால் நான் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக கூறுகிறார். சிதம்பரம், சிவகங்கை தொகுதிக்கோ, தமிழகத்திற்கோ, உண்மையிலேயே ஏதாவது செய்திருந்தால் அதனை பட்டியலிட வேண்டும். இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போனதற்கு சிதம்பரம் பொறுப்பா இல்லையா ? 13 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 931 கோடி தமிழகத்திற்கு தரப்படவில்லை என்பது உண்மையா இல்லையா? இதனை சிதம்பரம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் .
நான் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதால் மக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியாது என்று சிதம்பரம் கூறுகிறார். நான் 1982 முதல் தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். 32 ஆண்டுகளாக பட்டி தொட்டியெல்லாம் எனது காலடி பட்டிருக்கிறது. சிதம்பரத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என நான் பிரசாரம் செய்தேன். அப்போது சிதம்பரம் எனது பின்னால் வந்தார்.
காவலர் பணிச்சுமை, காலநேர விரயத்தைத் தவிர்ப்பது ஆகியவை காரணமாக நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து, சிதம்பரம் எனக்கு அனுப்பிய கடிதத்தையும், அவருக்கு நான் அனுப்பிய பதிலையும் அவர் படித்து பார்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை சிதம்பரம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.