அச்சம் என்பது மடமையடா… பாடலை பாட ஜெயலலிதாவிற்கு அருகதை இருக்கிறதா?: ஸ்டாலின்
திருவள்ளூர்: அச்சம் என்பது மடமையடா... என்ற பாடலை பாட அருகதையற்றவர் ஜெயலலிதா என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூரில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஸ்டாலின் பேசியதாவது:
ஜெயலலிதா தனது பிரச்சார உரையை படித்து முடிக்கும் போதெல்லாம் ஒரு பாடலை பாடி முடிக்கிறார். மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த மன்னாதி மன்னன் படத்தில் வரும் அந்தப் பாடல், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களால் எழுதப்பட்டது. ( பாடலை எழுதியது கண்ணதாசன்)
அந்தப் படத்தை பள்ளியில் படிக்கும் காலத்தில் சுமார் 10 முறைக்கு மேல் பார்த்து, ஆழமாக நினைவில் பதிந்த பாடல். நான் அதை பாடிக்காட்டடுமா, "" அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உரிமையடா, ஆறிலும் சாவு - நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா "", இதுதான் அந்தப் பாடல் வரிகள்.

அஞ்சுவது ஏன்?
இந்தப் பாடலை பாட ஜெயலலிதாவுக்கு அந்த தகுதி இருக்கிறதா ? அப்படி அச்சம் இல்லையென்றால் பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை எதிர்கொள்ளாமல் வாய்தா மேல் வாய்தா வாங்குவது ஏன் ? வருமான வரி ஏய்ப்பு வழக்கு, பரிசுகள் வாங்கிக் குவித்த வழக்குகளில், வாய்தா வாங்கிக் கொண்டிருக்கும் உனக்கு அந்தப் பாடலை பாட உரிமையில்லை.

சொத்துக்குவித்த ஜெயலலிதா
இன்று காலை நீங்கள் பத்திரிகையில் படித்து இருப்பீர்கள்..பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இன்னும் அதிகமான பட்டியல் வெளியாக உள்ளது.

தங்க நகைகள், புடவைகள்
அவை என்ன தெரியுமா ? ஜெயலலிதா வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தங்க - வெள்ளி நகைகள், 10,500 க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள் விவகாரம், ஜெயலலிதா உபயோகித்த ஏராளமான கைக்கடிகாரங்களின் பட்டியல், அதுமட்டுமல்ல ஜெயலலிதா பயன்படுத்தி வந்த செருப்புகள் என பலாயிரம் கோடிகள் ரூபாய் மதிப்புள்ள பொருட்களின் பட்டியல் வெளியாக உள்ளது.

3300 ஏக்கர் நிலங்கள்
ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோரும் வாங்கிக் குவித்துள்ள ஒட்டுமொத்த சொத்துக்கள் கிட்டத்தட்ட 3300 ஏக்கர் நிலங்கள் என பெங்களூரு நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

60 ரூபாய் சம்பளத்தில்
1991 - 1996 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில், ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது எனக்கு சம்பளமே வேண்டாம், ஆனால் அரசுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மாதம் 1 ரூபாய் மட்டும் சம்பளமாக வாங்கிக் கொள்கிறேன் என அறிவித்தார்.
அதன்படி 5 ஆண்டுகளில் ஜெயலலிதா பெற்றிருக்கக் கூடிய மொத்த சம்பளம் 60 ரூபாய். ஆனால் அந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஜெயலலிதா வாங்கி குவித்த பலாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சொத்துக்கள் எவ்வளவு என்று இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது.

பாடி அசத்திய ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கும் இப்போது பொறுத்தமான பாடல் எதுவென்றால்,
"" அம்மா என்பது மடமையடா,
அம்மாவை பார்ப்பது கடினமடா,
வறுமையில் சாவு, கொலையிலும் சாவு,
நாளைய தமிழகம் காப்பது கலைஞரடா,
என்று பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications