கோயம்பேடு மார்க்கெட் ஸ்டிரைக்: ஆனால், பூக்கள், காய்கறிகள் விலை சரிந்தது!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கோயம்பேடு சந்தையிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதம் மற்றும் மொட்டையடித்துக் கொள்ளும் போராட்டங்களிலும் வியாபாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.இதேபோல் கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையடைப்பு காரணமாக பூக்கள், காய்கறிகளின் விலைகள் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வருகின்றன.
பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மல்லிகை, வேலூர் மாவட்டங்களில் இருந்து ஜாதி பூக்களும், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாமந்தி, சம்பங்கி பூக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வந்து குவியும்.
வழக்கமாக பூ மார்க்கெட் மூடப்பட்டால், பூக்ககளை கொண்டு வருபவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியே பூக்களை வைத்து விற்பார்கள். இதனால் பூ வியாபாரிகளுக்கு பெரிய பிரச்சினை வராது.
ஆனால் இன்று கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வெளியேயும் பூக்களை விற்க கூடாது என்று முடிவு செய்து உள்ளனர்.
இன்று விற்காவிட்டால் பூக்கள் வாடிவிடும். வியாபாரிகளும், விவசாயிகளும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே, பாரிமுனை பூக்கடை, தாம்பரம், போரூர் சந்தைகளுக்கு பூக்கள் கொண்டு போகப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்பட்டன.
எப்படியாவது விற்க வேண்டும் என்பதாலும், இங்கு வழக்கத்தை விட பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் விலை சரிந்தது. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மல்லிகை 2 முதல் 3 டன்கள் வரையும், அதே அளவு ஜாதிப்பூக்களும், சாமந்தி பூக்கள் 5 முதல் 10 டன்கள் வரையும், சம்பங்கி, ரோஜா பூக்கள் 3 முதல் 5 டன்கள் வரையும் வரும்.
இன்று மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் ஓரளவு தாக்கு பிடிக்கும் பூக்களை விட்டு விட்டு கண்டிப்பாக பறிக்க வேண்டிய பூக்களை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
இந்த சந்தைகளில் வழக்கத்தை விட பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை மலிவாக இருந்தது. நேற்று கிலோ ரூ.250 வரை இருந்த மல்லிகை ரூ.150 வரையும், சாமந்தி ரூ.50-க்கும் விற்பனை ஆனது. ரோஜா கிலோ ரூ.30 விதம் விற்பனை ஆனது.
காய்கறிகள் விலை சரிவு
கோயம்பேடு சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி கடைகள் 2800 உள்ளன. இவை அனைத்தும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது.
இதனால், காய்கறிகள் அனைத்தும் சில்லறை கடைகளுக்கு நேரிடையாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதால் ஏறக்குறைய அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.3 முதல் ரூ.20 வரை குறைந்திருந்தது.
குறைந்த காய்கறிகள்
சில வாரங்களுக்கு முன் ரூ. 40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் ரூ.18-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.60-க்கும், கடந்த வாரத்தில் ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு கொத்துமல்லி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் எதிரொலியாக கடந்த ஒருவாரங்களாகவே கோயம்பேடு சந்தையில் உள்ள பல காய்கறிக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இன்றையதினம் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
சில்லறை கடைகளில் விற்பனை
இதனால் வெளியூர்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை லாரிகளில் கொண்டுவந்த காய்கறிகளை ஆங்காங்கே சில்லறை வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வரத்து அதிகமாக இருந்தும் காய்கறிகளின் விற்பனையும், விலையும் குறைந்துள்ளது என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.