தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகள்- ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், நகர விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது, தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்கவுள்ள சாவித்திரி கோபாலுக்கும், திண்டுக்கல் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்கவுள்ள மருதராஜ்க்கும் நியமன ஆணையையை ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு குடிநீர் அபிவிருத்தித் திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்துள்ளார்.
இவ்வாறு,நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 26 கோடியே 82 லட்சம் ரூபாய் ஆகும்.