தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க... போயஸ் தோட்டத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஜெ. வியூகம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ள நிலையில் இன்று அமைச்சர்களுடன் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்தும் இதற்காக நிலுவையில் உள்ள அரசு நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது, சட்டசபையில் விதி எண் 110 கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடுவது, அத் திட்டங்களை விரைவாக தொடங்குவது பற்றியும் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்ல உள்ள நிலையில் இக்கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.