கோத்தகிரியில் வேலை நியமன உத்தரவு கொடுத்த ஜெயலலிதா... உற்சாகத்தில் ஆர்.கே.நகர் பட்டதாரிகள்
கொடநாடு: முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வெடுக்கப் போனாலும் கட்சிப்பணி, ஆட்சிப்பணி என பிஸியாகவே இருக்கிறார். கடந்த 17ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு கோத்தகிரிக்கு அழைத்து பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. பணி வாய்ப்பு பெற்றவர்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையும் இணைந்து, எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் தொழிற்கல்வி படித்தவர்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கடந்த 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடத்தின.

இம்முகாமில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில், வேலையளிப்போர் கோரும் சிறப்பு திறன்களை அறிந்து அதற்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க விரும்புவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவையும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. மேலும், சுயவேலைவாய்ப்பு குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டது.
சரியான வழிகாட்டுதல் இல்லை என்றும், பயோடேட்டாவை மற்றும் வாங்கி வைத்துக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டனர் என்றும் பெரும்பாலோனோர் குற்றம் சாட்டினர். தென்மாவட்டங்களில் இருந்தும் பலரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.
5ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க பதிவு செய்தவர்களில் 5 பேருக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி நியமன உத்தரவு, கோத்தகிரியில் நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்டது.
பணி நியமன உத்தரவு பெற்ற ஐவருமே ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் சிறப்பம்சம். கார்த்திக்கேயன், மாலதி, ஹயாசுதீன், திவாகர் மற்றும் பனிவிழி ஆகியோர் முதல்வர் கையினால் பணி நியமன உத்தரவு பெற்றது குறித்து மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர். பணி நியமன ஆணையை கொடுத்த முதல்வர் ஆல் தி பெஸ்ட் என்று கூறி வாழ்த்தினார் என்றும், அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications