110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலை வெளியிட்டு திமுகவுக்கு ஜெயலலிதா பதிலடி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் சட்டசபையில் வெளியிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி வரும் கருணாநிதிக்கும், திமுக-வினருக்கும் துறை தோறும் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றி கடந்த 24 ஆம் தேதி மூன்று துறைகளைப் பற்றி விரிவாக தெரிவித்திருந்தேன். தற்போது மேலும், மூன்று துறைகளைப் பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.

வருவாய் துறை:
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் 10.9.2011 முதல் மாநிலம் முழுவதும் (சென்னை தவிர) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 31.3.2016 வரை 3 ஆயிரத்து 40 கோடி ரூபாய் அளவுக்கு 37 லட்சத்து 68 ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் - திருப்புவனம், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், பெரம்பலூர் மாவட்டம் - ஆலத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கிணத்துகடவு, அன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்போரூர், விழுப்புரம் மாவட்டம் - சின்ன சேலம், ஈரோடு மாவட்டம் - அந்தியூர், நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை என 9 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.
வருவாய் நிருவாக ஆணையர், நில நிருவாக ஆணையர் மற்றும் நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மொத்தம் 65 வட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவ - மாணவியர்களுக்கும் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 42 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மகசூல் இழப்பு ஏற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 58,719 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 145 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, திருப்பூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், கரூர், விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 25 புதிய வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு முறையாக செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாவட்டம் - எழும்பூர் மற்றும் தண்டையார்பேட்டை, மதுரை மாவட்டம் - மேலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் (வடக்கு), விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் என 5 வருவாய் கோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு, முறையாக செயல்பட்டு வருகின்றன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை:
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.64.70 கோடி செலவில் 38 ஆயிரத்து 505 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் வழங்கப்பட்டதால் 3 ஆயிரத்து 748 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
திருச்சி, விழுப்புரம், கடலூர், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிறமாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த 15 ஆயிரத்து 769 கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் தொழில் நுட்பவியல் துறை:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2.9.2011 முதல் ஒளிபரப்புச் சேவையைத் தொடங்கி, 26,246 உள்ளூர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் மூலம் 70 ரூபாய் மாதச் சந்தாவில், 70 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்களுக்கு 90 முதல் 100 சேனல்களை வழங்கி வருகிறது.
அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடைய, திட்டங்களின் செயல்பாட்டினை காலமுறை அடிப்படையில் கண்காணிக்கும் ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருள், அதாவது Scheme Monitoring Application Software உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டி.வி. வாயிலாக, மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் அதாவது க்ஷசடியனயெனே ளுநசஎiஉநள மற்றும் இதர இணையதள சேவை இணைப்புகள், முதற்கட்டமாக, 1,100 இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் உருவாக்குவதற்காக முழுமையான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் வழியாக கூடுதலாக மேலும் 300 சேவைகள் கண்டறியப்பட்டு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இணைய வழி தொலைக்காட்சி சேவை (Internet Protocol Television-IPTV) வழங்க, வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களை வாங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மூன்று துறைகளிலும் வெளியிடப்பட்ட 55 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications