அப்பல்லோவில் ஜெ.,..... வாசலில் எழுந்தருளிய துர்க்கை... தொண்டர்கள் பிரார்த்தனை
சென்னை : முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் துர்க்கை சிலை அமைத்து பூஜை செய்தனர். இந்த திடீர் துர்க்கா கோவில்தான் அதிமுகவினரின் வேண்டுதல் தலமாக தற்போது மாறியுள்ளது.
உடல்நலக்குறைவினால் கடந்த செப்டம்பர் 22ம்தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றோடு 33 நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஒரு மாத காலமும் மருத்துவமனையின் வாயில் பகுதி ஆலயம் போல காட்சி அளிக்கிறது. ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மத பேதமின்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைப்பதில் தொடங்கி, தேங்காய் உடைப்பது, அக்னிசட்டி எடுப்பது, உருள்வலம் வருவது என தினசரியும் பூஜைகள் செய்கின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பும், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனையும் தினசரியும் நடைபெறுகிறது.

அப்பல்லோ பிள்ளையார்
அப்பல்லோ வாசலில் உள்ள பிள்ளையாருக்கு தினசரியும் வேண்டுதல்களும், காணிக்கைகளும் குவிந்து வருகின்றன. மகளிர் அணியின் குத்துவிளக்கு பூஜையில் தொடங்கி சாமியார்களின் சூலாயுத பூஜை வரை நடத்தி அதிமுக தொண்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

எழுந்தருளிய துர்க்கை
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் அலங்கரிக்கப்பட்ட 3 அடி துர்கை அம்மன் சிலையை வைத்து பூஜை செய்தனர். ஞாயிறு அன்று தென் சென்னை மாவட்ட மகளிரணி தலைவி சரோஜினி தலைமையில் நடைபெற்ற ராகுகால துர்க்கா பூஜையில் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர். தற்காலிகமாக நிறுவப்பட்ட இந்த துர்க்கை சிலை முதல்வர் நலம்பெற்று வீடு திரும்பும் வரை மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

அம்மாவிற்காக ஆலயம்
ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று அதிமுகவினர் ஆலயத்திற்கு சென்றது போக இப்போது ஆலயத்தையே மருத்துவமனை வாசலுக்கு கொண்டு வந்து விட்டனர் அதிமுகவினர். இந்த கோவில் முன்பு சிலர் மொட்டை அடித்தும் வேண்டிக்கொண்டனர்.

பால்குடம் வழிபாடு
தென்சென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில், மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஆயிரத்து எட்டு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் நலம்
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்றும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட 11வது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை சோர்வடைந்திருந்த அதிமுக தொண்டர்கள் இந்த அறிக்கை வெளியான நாளில் இருந்து தற்போது உற்சாகமடைந்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஜெயலலிதா விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக உள்ளது.












Click it and Unblock the Notifications