15000 பேருடன் ரோட்டை அடைத்து பாதயாத்திரை போன "செல்லூர்"... கடும் கோபத்தில் மதுரை!
மதுரை: அம்மா முதல்வராக வேண்டி அமர்கள பூஜைகள் செய்த அதிமுகவினர், வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதாவிற்காக நேர்த்திக்கடன்களை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்ற பாதயாத்திரையால் மதுரைவாசிகள் திண்டாடித்தான் போனார்கள்.
மதுரையில் சித்திரை திருவிழா எபெக்ட் இன்னும் மாறாத நிலையில் நேற்று திருப்பரங்குன்றனம் வரை பல்லாயிரக்கணக்கானோருடன் அமைச்சர் செல்லூர் ராஜூ பாதையாத்திரை போனதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.
13 கி.மீ பாதையாத்திரை
ஜெயலலிதா மீண்டும் மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுமார் 13 கி.மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
காவடியாட்டம்
இது மட்டும் அல்லாமல் காவடி, யானை, குதிரை, பட்டாசு, கேரளா மேலதாளத்தோடு அம்மா வாழ்க என்ற முழக்கத்தோடு பெரும் அணியாக சென்றனர். இலவச தண்ணீர், பழங்கள், உணவுகள் என பாதயாத்திரைக்கு வந்தவர்களுக்கு கொடுத்து அசத்திவிட்டனர்.
கோஷ்டி இல்லாம எப்படி?
ஏற்கனவே ஜெயலலிதா பிறந்தநாளில் 25000 பேருடன் பால்குடம் எடுத்து கவனம் ஈர்த்தார் செல்லூர் ராஜூ. இப்போதோ பாதை யாத்திரை நடத்தியுள்ளார். மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவோ இந்த பாதயாத்திரையின் போது தொடக்கத்தில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு கழண்டு கொண்டு விட்டாராம்.
பொதுமக்கள் அவதி
அதிமுகவினர் நடத்திய பாதையாத்திரை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக அமைந்து விட்டது. போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படவே பெரும் கூட்ட நெறிசலில் சிக்கி மக்கள் தவித்தனர். இந்த பாதையாத்திரை அதிமுகவினருக்கு குதூகலத்தையும். மதுரை மக்களுக்கு ஆதங்கத்தையும் ஏற்படுத்திவிட்டதாகவே கூறப்படுகிறது.