7 வது முறையாக அதிமுக பொதுச்செயலாளர் ஆக தேர்வாகிறார் ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பெயரில் தமிழக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.
மேலும், அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதாவை தேர்வு செய்வதற்கு விருப்பம் தெரிவித்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் மனு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், 29 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
முதல் பொதுச்செயலாளர்
1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். 1974 ஆம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது அது முதல் 1977 ஆண்டுவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த எம்.ஜி.ஆர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
பொதுச்செயலாளர்கள்
அதன் பின்னர் பி.யு.சண்முகம், நெடுஞ்செழியன்,ராகவானந்தம் ஆகியோர் அதிமுகவின் பொதுச்செயலாளர்களாக இருந்துள்ளனர். மூன்றுமுறை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு மறைந்தார்.
பிரிந்து இணைந்த அதிமுக
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் கட்சி இரண்டாக பிளவு பட்டது. அதிமுக ஜெ அணி, ஜானகி அணி ஆக செயல்பட்டது. இதன் பின், 1989-ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றுபட்ட கட்சியாக அதிமுகவாக உருவெடுத்தது.
அதிமுக பொதுச்செயலாளர்
அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
25 ஆண்டுகாலமாக
இதுவரை ஆறு முறை ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போது ஏழாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும்.
நிரந்தர பொதுச்செயலாளர்
கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளரே என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஜெயலலிதாவை அழைக்கின்றனர். அவர்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்பதை பொதுச்செயலாளர் தேர்தலின் போது ஒவ்வொருமுறையும் நிரூபித்து வருகிறார் ஜெயலலிதா.