எம்.எல்.ஏவாக சனிக்கிழமை ''புதன் ஓரையில்'' பதவியேற்கிறார் ஜெ.: கொடநாடு பயணம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை(சனிக்கிழமை) ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளதாகவும் அதனையடுத்து கொடநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உடனடியாக எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டு பல்வேறு அரசு சார்பிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக இருந்தது.

பிரதமர் மோடியின் நண்பர் தொழிலதிபர் அதானி குழுமத்துடன் சூரிய சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, இப்தார் விருந்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. ஆனால் திடீரென அனைத்து நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த நிலையில் ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு புதன் ஒரையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று எம்.எல்.ஏ.வாக பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் கோட்டையில் செய்யப்பட்டு வருகின்றனவாம். ஜெயலலிதா முதல்வராக சனிக்கிழமையன்று புதன்ஓரையில்தான் பதவியேற்றார். அதேபோல எம்.எல்.ஏவாகவும் சனிக்கிழமையன்று பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
பதவிப்பிரமாணம் முடிந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டிற்கு முதல்வர் செல்ல இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா கொடநாடு செல்வதால் அவரை வரவேற்க கொடநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொடநாடு எஸ்டேட் செல்லும் ஜெயலலிதா சுமார் 2 வாரம் அங்கு தங்கி இருந்து அரசுப் பணிகளை கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் வருகையை முன்னிட்டு வரவேற்பு கொடி தோரணங்கள் கட்டப்பட்டு எஸ்டேட் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. செண்டை மேளம் முழங்க ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் வரவேற்பு கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா ஆண்டுதோறும் மே மாதத்தில் கொடநாடு பயணம் மேற்கொள்வார். இந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சிறைதண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த பின்னரும் வீட்டிற்குள்ளேயே இருந்த அவர், அதற்கு பின்னர் மே 17ம் தேதி கர்நாடகா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வராக பதவியேற்ற கையோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே எம்.எல்.ஏவாக பதவியேற்ற உடன் தற்போது கொடநாடு செல்ல இருப்பதாக போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications