ஜெ. சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவிற்கு அவகாசம்... எங்கேயோ இடிக்குதே?
ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவிற்கு ஜனவரி 12 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஜனவரி 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் சிறிது காலம் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டு என்றும் அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து ஜெயலலிதா உடல்நிலை தேறி வருவதாகக் கூறி வந்த அப்பல்லோ நிர்வாகம் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை மோசமாக இருப்பதாக திடீரென சொன்னது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லி வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு ஜெயலலிதா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அப்பல்லோவிற்கு சம்மன்
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த கமிஷன் ஒரு மாதத்திற்குப் பின்பே விசாரணையைத் தொடங்கியது. கடந்த மாதம் ஜெ. சிகிச்சை விவரங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
2 வாரம் அவகாசம் கோரியிருந்தது
இதே போன்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிற்கும் கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 5க்குள் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 2 வார கால அவகாசம் கோரி நீதிபதி கமிஷனிடம் விண்ணப்பித்திருந்தது.
ஜனவரி 12க்குள் அவகாசம்
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை ஜனவரி 12ம் தேதிக்குள் மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய அப்பல்லோ ஏன் அவகாசம் கேட்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
சந்தேகம்
ஜெயலலிதாவிற்கு உலகத் தரத்தில் சிகிக்சை அளிக்கப்பட்டதாகவும், எந்த விசாரணைக்கும் தயார் என்றும் அப்பல்லோ கூறி இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதா மோசமான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மக்கள் அச்சப்படுவார்கள் என்று உண்மை நிலவரத்தை சொல்ல வில்லை என்று பிரதாப் ரெட்டி கூறி இருந்ததும் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் தற்போது ஏன் அகவாசம் கேட்கிறது என்ற கேள்வி அனைவர் மனதிலும் வருகிறது. இதனிடையே பெங்களூர் சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதால் அவர் விளக்கம் அளிப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.