நீதிபதி குமாரசாமியின் நீதித்துறை வரலாற்றில்.. முதல் முறையாக "மாற்றி"த் தீர்ப்பு?
சென்னை: நீதிபதி சிக்க ராச்சப்ப குமாரசாமி.. ஒரே நாளில் இந்தியா முழுவதும் பேசப்பட்ட பெயராக மாறியுள்ளது, ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமியின் பெயர்.
இன்னும் 2 மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதற்கு பல காரணம் சொல்லலாம். ஆனால் குமாரசாமியின் நீதிபதி கால தீர்ப்புகளைப் பார்த்து வருவோருக்கு இது நிச்சயம் ஒரு மாற்று தீர்ப்புதான்.
காரணம், கடந்த 2007ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் நீதிபதி குமாரசாமி, இதுவரை எந்த ஒரு அப்பீல் வழக்கிலும், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்ததில்லை என்று சொல்கிறார்கள்.
பெரும்பாலும் தண்டனையை உறுதி செய்துள்ளார். அல்லது கூட்டிதான் கொடுத்துள்ளார். ஒரு வழக்கில் கூட அவர் கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது கிடையாதாம். எனவே இந்த தீர்ப்பு பலரை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
இது இன்னும் ஒரு அப்பீல் வழக்காக இருந்திருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்காது. ஆனால் ஜெயலலிதா வழக்கு என்பதால் அனைவராலும் பேசப்படும் தீர்ப்பாக மாறிப் போயுள்ளது.
1953ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பிறந்த நீதிபதி குமாரசாமி, 1983ம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். சிவில், தொழிலாளர், கிரிமினல் கோர்ட்டுகளில் பணியாற்றியுள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதி, செஷன்ஸ் நீதிபதி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெறவுள்ள நீதிபதி குமாரசாமி, தனது நீதித்துறை வாழ்க்கையில் மறக்க முடியாத வழக்குடன் பணியிலிருந்து விடைபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.