மத்திய- மாநில உறவு குறித்து ஆராய நீதிபதி குரியன் ஜோசப் குழு- இவர்பெயரை சொன்னாலே டெல்லியே அதிருமே!
சென்னை: இந்திய அரசியலில் மத்திய- மாநில அரசுகளின் உறவுகள்- அதிகாரங்கள் குறித்த வரலாற்றில் மற்றொரு இடம் பிடித்திருக்கிறது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு. மத்திய- மாநில அரசுகளின் அதிகார உறவுகள் தொடர்பாக ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நாடு விடுதலை அடைந்த காலம் முதலே மத்திய- மாநில அரசுகளின் அதிகாரங்கள் தொடர்பாக ஆராய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஹனுமந்தையா கமிட்டி, ராஜமன்னார் குழு, சர்க்காரியா கமிஷன், பூஞ்சி கமிஷன் என நீளூம் இந்த பட்டியலில் இப்போது இணைந்திருக்கிறது நீதிபதி குரியன் ஜோசப் கமிட்டி.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோரை அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது; இந்த குழு ஜனவரி மாதம் தமது அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்றார்.
யார் இந்த நீதிபதி குரியன் ஜோசப்
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நீதிபதி குரியன் ஜோசப். உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கினார்.
இஸ்லாமியர்கள் பின்பற்றி வந்த முத்தலாக் விவாகரத்து முறையே தவறு என்கிற சரித்திரம் பேசும் தீர்ப்பை வழங்கியவர் குரியன் ஜோச. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானுக்கு எதிரானது முத்தலாக் முறை என தமது தீர்ப்பில் ஆணித்தரமாக பதிவு செய்தவர் குரியன் ஜோசப்.
மேலும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் முறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தியவர் நீதிபதி குரியன் ஜோசப்.
அரசு பணி பதவி உயர்வுகளை தலித்- பழங்குடியினர் பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த நிபந்தனைகளை அதிரடியாக நீக்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச்சில் நீதிபதி குரியன் ஜோசப்பும் ஒருவர். தூக்கு தண்டனை முறைக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்.
மேலும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக இந்திய சரித்திரத்திலேயே முதல் முறையாக சிட்டிங் நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இந்தியாவையே அதிர வைத்தவர்களில் ஒருவர்தான் நீதிபதி குரியன் ஜோசப்.












Click it and Unblock the Notifications