நல்ல தீர்ப்பு... மகிழ்ச்சி - சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரி நல்லமநாயுடு
சசிகலா உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தண்டனையின் மூலம் நீதி வென்றுள்ளது என்று சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற எஸ்.பி என். நல்லமநாயுடு கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி நல்லமநாயுடு, நேற்றுதான் நிம்மதியாக உறங்கியிருப்பார். ஊழல் குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மூலம் நீதி வென்றுள்ளது என்றும்21 ஆண்டுகள் கழித்து மகிழ்ச்சி அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக காவல் துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பு ஏற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
என் நல்லமநாயுடு
லஞ்ச ஒழிப்புப் பிரிவில், அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த என்.நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த நல்லமநாயுடு படிப்படியாக பதவி உயர்வு பெற்று, காவல் கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார்.
நீதி வென்றது
இப்போது நல்லமநாயுடு சென்னை பெரவள்ளூரில் வசித்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றி கருத்து கூறிய அவர், நீதி வென்றுள்ளது என்று கூறியுள்ளார்.இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக லத்திகா சரணை நியமிக்க அரசு அப்போது முடிவு செய்திருந்தது. ஆனால் லத்திகா சரண் விசாரணை அதிகாரி பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் அப்போது ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த என்னை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்தது என்று கூறினார்.
வேதனை அனுபவித்தேன்
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நாள் முதல், பல்வேறு தொந்தரவுகளையும், வேதனைகளையும் அனுபவித்தேன். எனது குடும்பமும் வேதனையை அனுபவித்தது. அதை இப்போது கூற விரும்பவில்லை. நான் சேகரித்த சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறிய போது மனது வலித்தது என்றார்.
நான் துன்புறுத்தவில்லை
இந்த வழக்கை பொறுத்தவரையில் நான் யாரையும் துன்புறுத்தவில்லை. சட்டசத்திற்கு உட்பட்டு மிகவும் நேர்மையாக நியாயமாக விசாரணை நடத்தினேன். இந்த வழக்கு விசாரணையை நான் நடத்திய போது வேறொரு வழக்கிற்காக சென்னை மத்திய சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தார்.
27 நாட்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினேன்.
ஜெயலலிதா பதில்
நான் கேட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட கோபப்படாமல் ஜெயலலிதா பொறுமையாக பதில் அளித்தார். சசிகலா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே போய் விசாரித்தேன். இளவரசியிடம் மன்னார்குடிக்கு போய் விசாரித்தேன்.
சுதாகரன் கைது
இந்த வழக்கை பொறுத்தவரையும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய 3 பேரையும் கைது செய்யவில்லை. இளவரசி தானாக சரணடைந்தார். சுதாகரன் விசாரணைக்கு வரவில்லை. எனவே அவர் பழனி பாதையாத்திரை சென்ற போது கைது செய்தோம் என்றும் கூறினார்.
நேர்மையாக செய்தேன்
ஓய்வுபெற்ற பிறகும்கூட இந்த வழக்கின் விசாரணைக்காக அரசு எனக்கு 4 முறை பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த வழக்கில் நான் எனது பணியை நேர்மையாக செய்தேன் என்ற திருப்தி இருந்தது. கடந்த 2015 மே 11 ஆம் தேதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டபோது, மனதுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
மகிழ்ச்சி தந்த தீர்ப்பு
இந்த வழக்கில் 21 ஆண்டுகள் கழித்து தற்போது, உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.இந்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று கூறியுள்ளார் நல்லமநாயுடு. சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள்தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நல்லமநாயுடு சேகரித்த ஆதாரங்கள்
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் வி.சி பெருமாள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். என் நல்லமநாயுடு தனது விசாரணையை தொடங்கினார். பல இடங்களுக்கு சென்று அஞ்சாமல் தடயங்களையும் ஆதாரங்களையும் சேகரித்தார் நல்லமநாயுடு. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவரது ஆந்திர திராட்சைத் தோட்டங்களிலும் விசாரணை நடத்திய அவர் 1997 ஜூன் 4ஆம் தேதியன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.
நல்லமநாயுடு சேகரித்த ஆதாரங்கள்
1996ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் வி.சி பெருமாள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். என் நல்லமநாயுடு தனது விசாரணையை தொடங்கினார். பல இடங்களுக்கு சென்று அஞ்சாமல் தடயங்களையும் ஆதாரங்களையும் சேகரித்தார் நல்லமநாயுடு. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவரது ஆந்திர திராட்சைத் தோட்டங்களிலும் விசாரணை நடத்திய அவர் 1997 ஜூன் 4ஆம் தேதியன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தார்.
உயிருக்கு ஆபத்து
தமிழக நீதிமன்றத்தில் பல சாட்சியங்கள் பல்டியடித்த போது நேர்மையாக இருந்து தனது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்தார். உயிருக்கு ஆபத்து உள்ளது என்று நீதிமன்றத்திலேயே கூறினார் நல்லமநாயுடு. வழக்கு பெங்களூருவிற்கு மாறிய பின்பே விசாரணையின் போக்கு மாறியது. குன்ஹா நேர்மையாக தீர்ப்பளித்தார். ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தாலும் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. நல்லமநாயுடு விசாரித்த வழக்கில் 20 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.
குற்றப்பத்திரிக்கை
இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லமநாயுடுவின் விசாரணையும், அவர் சேகரித்த தடயங்களும்,ஆவணங்களும் மிக முக்கியமான காரணம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையே, குற்றவாளிகளுக்கு தண்டனையை தேடி தந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.