காவிரி மேலாண்மை வாரியம்... சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு விவசாய சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்பு
சென்னை: 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக தமிழகம் போராடி வருகிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கண்டு கொள்ளவில்லை. இதனால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது.
இப்போது சுப்ரீம் கோர்ட் 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இது மத்திய அரசின் தலையில் சுப்ரீம் கோர்ட் வைத்துள்ள குட்டு. இனியாவது காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு முறைப்படியான மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
அதே போன்று கர்நாடக அரசு 6000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட மறுக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இந்த முறையாவது கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீரை திறந்து விட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.