”கலாம் ஐயா உங்கள் இழப்பு எனக்கு பேரிடி”- தற்கொலை செய்து கொண்ட திருப்போரூர் இளைஞர்
திருப்போரூர்: திருப்போரூரில் இளைஞர் ஒருவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்காக உயிர் அஞ்சலி செய்வதாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
திருப்போரூரை அடுத்த இள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேப்டி உதவியாளராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி. உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் கன்னகப்பட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
இன்று காலை அவருடன் பணி புரியும் ஊழியர் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியே பார்த்த போது அங்குள்ள மின்விசிறியில் சுப்பிரமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர் திருப்போரூர் போலீசுக்கும், கம்பெனி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டில் சோதனை செய்த போது சுப்பிரமணி எழுதி வைத்து இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், "நான் இந்த முடிவை எடுத்ததற்கு முதலில் என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் என் இனிய உறவினர்கள், என் இனிய ஆருயீர் நண்பர்கள் அத்தனை பேரும் மன்னிக்கவும். நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. காரணம் நான் மிகவும் நேசித்த கலாம் ஐயா அவர்களின் இறப்பு என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது.
இந்தியாவை உலக நாடுகளுக்கு முன்னால் தலை நிமிர வைத்த அந்த அற்புத மாமனிதர் கலாம் ஐயா. அவர் இறந்ததற்கு கடந்த மூன்று நாட்களாக இந்தியாவே குறிப்பாக தமிழகமே சோகத்தில் மூழ்கியது. என் வயதிற்கு இப்படிப்பட்ட எளிமையான, தூய்மையான மாமனிதரை பார்த்ததில்லை.
ராமேஸ்வரம் கொடுத்த ரத்தினத்தை இழந்து விட்டோம். அவருக்கு இந்த தமிழக மக்கள் பலவிதமான முறையில் அஞ்சலி செலுத்தினார்கள்.
எனவே யாருமே கலாம் ஐயாவுக்கு செய்யாத அஞ்சலியாக எனது உயிரை நானே மாய்த்துக் கொண்டு இந்த உயிர் அஞ்சலியே செலுத்துகிறேன். நிச்சயம் எனது அஞ்சலியை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் ராமேஸ்வரம் மண்ணுக்கு. கலாம் ஐயா புதைக்கப்பட வில்லை அதற்கு மாறாக விதைக்கப்பட்டிருக்கிறார். நம்முடைய ஒவ்வொருவர் உள்ளத்திலும், இல்லத்திலும் நிலைத்து இருப்பார். எனது உடலை நான் பிறந்த மண்ணுக்கும், எனது நீங்கா நினைவுகளை எனது நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கின்றேன். கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்ற இந்நாட்டிலுள்ள குழந்தைகள், மாணவச் செல்வங்கள் மற்றும் இனிய விவேகமான இளைஞர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அப்துல்கலாம் மறைவை தாங்க முடியாத சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் திருப்போரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.