கள்ளக்குறிச்சி கலவரம்.. அதிகாரிகள் தூக்கியடிப்பு தொடர்கிறது.. பெண் டிஎஸ்பி டிரான்ஸ்பர்.. அரசு அதிரடி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் தொடர்பாக தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக பெண் டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் எஸ்பி காத்திருப்பு பட்டிலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.

கலவரமான போராட்டம்
கடந்த 17 ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து பஸ்களை சேதப்படுத்தினர். 3,000 மாணவர்களின் டி.சி உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து தீக்கிரை ஆகின. மேலும் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக 200-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் -எஸ்பி மாற்றம்
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலவரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஸ்ரீதர், சென்னை கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவதி நியமனம் செய்யபட்டார். மேலும் கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வக்குமார் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பகலவன் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு அதிகாரி மாற்றம்
இதன் தொடர்ச்சியாக தற்போது கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக இருந்த ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய டிஎஸ்பியாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

உளவுத்துறையிலும் மாற்றம்
முன்னதாக இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள், அமலாக்கத்துறை ஐஜியாக மாற்றப்பட்டார். உளவுத்துறையின் புதிய ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications